ஹிஜாப் விவகாரத்தில் நீதிமன்றம் இன்று தீர்ப்பு .. பொதுமக்களுக்கு பலத்த கட்டுப்பாடுகள்.. பாதுகாப்பு பணியில் காவல் துறை!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்க இருக்கிறது. இதனை அடுத்து பொது இடங்களில் ஒன்றுகூட கூடாது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை பொதுமக்களுக்கு விதித்து இருக்கிறது கர்நாடக காவல்துறை.

Advertising
>
Advertising

ஹிஜாப் விவகாரம்

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை கல்லூரி நிர்வாகம் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை என சில வாரங்களுக்கு முன்னர் குற்றச்சாட்டு எழுந்தது. சில நாட்களிலேயே கர்நாடகா முழுவதிலும் இது தொடர்பாக போராட்டங்கள் நடைபெற்றன. மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததை எதிர்த்து சில மாணவர்கள் காவித் துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர்.

இந்த விஷயம் தீவிரமடையவே, மாநிலம் முழுவதிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்திருந்தார் அந்த மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை.

வழக்கு

இதனை அடுத்து உடுப்பி பகுதியை சேர்ந்த இஸ்லாமிய மாணவிகள் இதுகுறித்து நீதிமன்றத்தில் புகார் அளித்தனர். அரசியல் அமைப்பு வழங்கியுள்ள மத சுதந்திரத்தை அரசின் இந்த முடிவு பறிப்பதாக அந்த மாணவிகள் தங்களது மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். மாணவர்கள் அனைவரும் சீருடை மட்டுமே அணிய வேண்டும் என்பதற்காகவே இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டதாக கர்நாடக அரசு நீதிமன்றத்தில் வாதிட்டது.

11 நாள் விசாரணை

இந்த வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்து ராஜ் அஸ்வதி, நீதிபதிகள் கிருஷ்ணா தீட்சித், ஜெஎம் காஸி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணை செய்துவந்தது. புகார் அளித்த மாணவிகள் மற்றும் கர்நாடக அரசு ஆகியோரின் தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

கட்டுப்பாடுகள்

ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த 11 நாட்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியாக இருக்கிறது. இதனை அடுத்து பொது அமைதி மற்றும் சட்ட ஒழுங்கை காக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது கர்நாடக காவல்துறை.

இது தொடர்பாக பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல் பந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நாளை (மார்ச் 15) முதல் மார்ச் 21 வரை ஒரு வாரத்திற்குப் பெங்களூரில் அனைத்து வகையான கூட்டங்கள், போராட்டங்கள் அல்லது கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய ஹிஜாப் விவகாரத்தில் இன்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க இருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடாக காவல்துறை பல கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

HIJAB, HIJABISSUE, COURT, JUDGEMENT, ஹிஜாப், நீதிமன்றம், ஹிஜாப்விவகாரம், தீர்ப்பு

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்