'3 கிலோ தங்கம்... 7 கிலோ வெள்ளி... ரூ.250 கோடி சொத்து!'.. அரசு அதிகாரியின் தோழி வீட்டில் அதிர்ச்சி சம்பவம்!.. பின்னணியில் யார்?.. அடுத்தடுத்து வெளியாகும் பரபரப்பு தகவல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கர்நாடக அரசு பெண் அதிகாரியின் தோழி வீட்டில் ஊழல் தடுப்பு படையினர் ( Anti-Corruption Bureau) நடத்திய சோதனையில் ரூ.250 கோடி சொத்து ஆவணங்கள், 3½ கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பெங்களூருவில் கர்நாடக அரசின் உயிரியல் தொழில்நுட்ப துறையில் நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார் சுதா. இவர், இதற்கு முன்பு பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தில் நிலம் கையகப்படுத்தும் அதிகாரியாகப் பணியாற்றினார்.

அப்போது விவசாயிகளிடம் கையகப்படுத்திய நிலங்களுக்கு, அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட பணத்தைக் கொடுக்காமல் மோசடி செய்ததாக ஊழல் புகார்கள் எழுந்தது.

இதையடுத்து, சுதா வீட்டில் சோதனை நடத்த ஊழல் தடுப்பு படைக்கு, லோக் ஆயுக்தா உத்தரவிட்டிருந்தது. அதன்படி பெங்களூர் கொடிகேஹள்ளியில் உள்ள சுதாவின் வீடு, சாந்திநகரில் உள்ள அலுவலகம் உள்பட 6 இடங்களில் சோதனை நடந்தது.

இந்த சோதனையின் போது பல லட்சம் ரூபாய் நகை மற்றும் பணத்தை ஊழல் தடுப்புப் படையினர் கைப்பற்றிச் சென்றனர்.

இந்த நிலையில், சுதாவின் தோழி ரேணுகா என்பவர் சுதாவுக்கு லஞ்சப் பணத்தை வாங்கிக் கொடுக்கும் ஏஜெண்டு போல செயல்பட்டு வந்ததாக ஊழல் தடுப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பேடராயனபுராவில் உள்ள ரேணுகா வீட்டில் ஊழல் தடுப்புப் படையினர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், ரேணுகாவின் வீட்டிலிருந்து 3½ கிலோ தங்கநகைகள், 7 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.35 லட்சம் ரொக்கம், 40 வங்கிக் கணக்கு புத்தகங்கள், 100 காசோலைகள், ரூ.250 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இவை அனைத்தும் சுதாவுக்கு சொந்தமானதாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்து உள்ளது.

சுதாவின் தோழி ரேணுகாவின் கணவர் சந்திரசேகர் ஓய்வுபெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவார். மகன் மின்வாரியத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார். ரேணுகா ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், சுதாவின் சொத்துகளுக்கு அவர் தான் பினாமி என்றும் கூறப்படுகிறது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்