'நாட்டையே உலுக்கிய ஜெசிகா லால் படுகொலை'....'மனு சர்மா விடுதலை'... 'யார் இந்த ஜெசிகா'?... ஹோட்டலில் நடந்தது என்ன?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மாடல் அழகி ஜெசிகா லால் (Jessica Lal) படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி மனு சர்மா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

Advertising
Advertising

நாடு முழுவதும் அதிகம் பேசப்பட்டதும், கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய வழக்குகளில் ஒன்று தான் மாடல் அழகி ஜெசிகா லால் படுகொலை வழக்கு. கடந்த 1999 ஏப்ரல் 30-ம்தேதி டெல்லியில் உள்ள டாமரின்ட் உணவகத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் வினோத் சர்மாவின் மகன் மனு சர்மா, தனக்கு மதுபானம் ஊற்றிக் கொடுக்குமாறு ஜெசிகாவிடம் கூறியுள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்க, கடும் ஆத்திரத்திலிருந்த மனு சர்மா ஜெசிகாவை தனது துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுக் கொன்றார்.

நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில், மனு சர்மா கீழ் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். இது நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்தன. இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டபோது, மனு சர்மா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் இதனை எதிர்த்து மனு சர்மா சார்பில், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், 2010-ல் மனு சர்மாவுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் தண்டனையை அனுபவித்து வந்தார். சிறையில் 17 ஆண்டுகளுக்கும் குறைவான காலம் தண்டனையை அவர் அனுபவித்து வந்த நிலையில், நன்னடத்தை காரணமாக அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை டெல்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜால் பிறப்பித்திருக்கிறார்.

இதற்கு முன்பே மனு சர்மா நன்னடத்தை காரணமாகத் திறந்த வெளி சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தவாறே அவர், கைதிகளின் மறுவாழ்வுக்கு பணியாற்றும் என்.ஜி.ஓ. நிறுவனத்தில் பணியாற்றினார். இதற்கிடையே ஜெசிகா லாலின் தங்கை சப்ரினா லால், 'மனு சர்மாவை தாங்கள் மன்னித்து விட்டதாகவும், அவரை விடுவிப்பதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும், கடந்த 2018ம் ஆண்டு என்.டி.டி.வி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்