Breaking: இந்தியாவின் 14-வது துணை குடியரசு தலைவர் ஆகிறார் ஜெகதீப் தன்கர்.. யார் இவர்..?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவின் 14-வது துணை குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ஜெகதீப் தன்கர். இதனையடுத்து அவருக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertising
>
Advertising

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் ராமநாத் கோவிந்த் அவர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததை முன்னிட்டு குடியரசு தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்பட்டது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த திரௌபதி முர்மு வெற்றி பெற்றார். இதனையடுத்து, இந்தியாவின் துணை குடியரசு தலைவரான வெங்கய நாயுடுவின் பதவிக்காலம் முடிவடைவதை முன்னிட்டு இன்று தேர்தல் நடைபெற்றது.

தேர்தல்

ஜூலை 6 ஆம் தேதி தொடங்கிய குடியரசுத் துணைத் தலைவருக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூலை 19 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜெகதீப் தன்கர் அறிவிக்கப்பட்டார். எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் மார்க்கரெட் ஆல்வா நிறுத்தப்பட்டார். இன்று காலை 10 மணியளவில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. டெல்லியில் நாடாளுமன்றத்திலும் மாநில தலைமைச் செயலகங்களிலும் பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் பிரதமர், பல்வேறு மாநில முதல்வர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். இந்த வாக்குகள் இன்று மாலை எண்ணப்பட்டன.

ஜெகதீப் தன்கர்

இன்று மாலை நடைபெற்றுவந்த வாக்கு எண்ணிக்கையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA) வேட்பாளர் ஜெகதீப் தன்கர் வெற்றி பெற்றிருக்கிறார். இதன் மூலம் அவர் இந்தியாவின் 14 வது துணை குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். தேர்தலில் அவர் 528 வாக்குகள் பெற்றிருக்கிறார். எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான மார்கரெட் ஆல்வா 182 வாக்குகள் பெற்றார்.

1951 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி அன்று ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள கித்தானா என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார் ஜெகதீப் தன்கர். சித்தோர்கர் சைனிக் பள்ளியில் படித்த இவர் ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். அதன்பின்னர் அரசியலில் கால்பதித்த தன்கர் ஜனதா தள கட்சியின் சார்பில் ராஜஸ்தானில் சுன்சுனூ மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு  நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர் 1993 ஆம் ஆண்டு ராஜஸ்தானின் கிஷன்கர்ட் தொகுதியிலிருந்து சட்ட மன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், இந்தியாவின் 14-வது துணை குடியரசு தலைவராக ஜெகதீப் தன்கர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை அடுத்து அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

VICEPRESIDENT, INDIA, JAGDEEP DHANKHAR, குடியரசுதுணைத்தலைவர், இந்தியா, ஜெகதீப்தன்கர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்