'கொரோனா நேரம்'...'கல்யாணத்திற்கு வித்தியாசமான பிளான் போட்ட ஜோடி'... வாயடைத்து போன உறவினர்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா நேரத்தில் வித்தியாசமான முறையில் திருமணம் செய்த ஜோடியை உறவினர்கள் உட்படப் பலரும் பாராட்டிச் சென்றார்கள்.

துபாயில் வசித்து வரும் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த முகம்மது ஜாசம் மற்றும் அல்மாஸ் அகமது ஆகியோருக்கு திருமணம் நேற்று முன்தினம் நடைபெற்றது. மணமகள் அல்மாஸ் இங்கிலாந்து நாட்டில் இறுதியாண்டு மருத்துவ படிப்பைப் படித்து வருகிறார். ஜாசம், ஏரோநாட்டிக்கல் பொறியாளர். மணமகன் முகம்மது ஜாசமின் சகோதரியின் உடன் படித்தவர்தான் மணமகள். ஆனால் அவரை இதற்கு முன்னர் சந்தித்தது இல்லை என முகம்மது ஜாசம் கூறினார்.

இதனிடையே திருமண ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில், கொரோனா சூழ்நிலை காரணமாகத் திருமணத்தை எப்படி நடத்தலாம் என இருவரும் திட்டம் போட்டார்கள். அதன்படி இருவரும் தங்கள் திருமண வரவேற்பை சமூக இடைவெளியுடன் நடத்தலாம் என முடிவு செய்தார்கள். அதன்படி அவர்கள் வசித்து வரும் ஜுமைரா பகுதியில் வீட்டின் வெளியே அலங்கார வளைவு அமைக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்காக வாட்ஸ்-அப் மூலம் வீடியோவை அழைப்பாக அனுப்பி இருந்தனர். அதில் அந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விதம் குறித்து விளக்கப்பட்டு இருந்தது.

திருமண வரவேற்பு நாளன்று சமூக இடைவெளி மற்றும் சுகாதார பாதுகாப்பு காரணங்களுக்காக வித்தியாசமாக வீட்டு வாசலின் முன்னால் அமைக்கப்பட்டு இருந்த அலங்கார வளைவு முன் இருவரும் நின்றனர். மாலை 4 மணி முதல் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என விருந்தினர்கள் பலரும் வர ஆரம்பித்தார்கள். இந்த நிகழ்ச்சிக்கு வாகனத்தில் வந்தவர்கள் வாகனத்தை விட்டு வெளியே வராமல் உள்ளே இருந்தபடியே வாசலின் முன்னால் நின்று கொண்டிருந்த மணமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து புகைப்படமும் எடுத்துச் சென்றனர்.

ஒவ்வொரு வாகனத்துக்கும் 2 நிமிட நேரம் வாழ்த்து தெரிவிக்க வழங்கப்பட்டு இருந்தது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடித்து வித்தியாசமாக சமூக இடைவெளியுடன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்று முடிந்தது. இந்த வித்தியாசமான முயற்சி பலரையும் கவரும் விதத்தில் அமைந்திருந்தது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்