‘இந்தியாவில் கொரோனா தடுப்பூசி’... ‘ஒத்திகை எப்படி இருந்தது?’... ‘மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்’...!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடைமுறைகளுக்கான ஒத்திகை நடவடிக்கைகள் வெற்றி பெற்றுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடான, பிரிட்டனைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலையும், 'ஆஸ்ட்ராஜெனகா' நிறுவனமும் இணைந்து, கொரோனாவுக்கான தடுப்பு மருந்து தயாரிக்கின்றன. இந்த மருந்தை இந்தியாவில் பரிசோதித்து, தயாரிக்கும் பொறுப்பை, மஹாராஷ்டிராவின், புனேவை சேர்ந்த, சீரம் நிறுவனம் ஏற்றுள்ளது. இந்த தடுப்பு மருந்தின் அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதி, அடுத்த மாதம் வழங்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து, தடுப்பு மருந்து வழங்கும் பணிகளுக்கான நடைமுறைகளை சோதனை ஓட்ட அடிப்படையில் செய்து பார்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில், பஞ்சாப், அசாம், ஆந்திரா மற்றும் குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் தலா 2 மாவட்டங்களில் நேற்றும், இன்றும் சோதனை ஓட்ட பயிற்சிகள் நடந்தது. தடுப்பூசி வழங்கும் பணிகளுக்காக 'கோ வின்' என்ற 'மொபைல் போன்' செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இதில், பயனாளர்களின் தகவல்களை பதிவேற்றுவதில் துவங்கி, தடுப்பு மருந்து வைக்கப்படும் குளிர்பதன கிடங்கு பரிசோதனை, அங்கிருந்து தடுப்பூசி மையத்திற்கு மருந்துகளை எடுத்து வருவது உள்ளிட்ட நடைமுறைகள், இந்த சோதனை ஓட்ட பயிற்சியின் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சோதனை ஓட்ட முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தடுப்பூசி செலுத்துவதை தவிர, மற்ற அனைத்து பணிகளில் உள்ள நடைமுறை சிக்கல்களை கண்டறிந்து, அதை முன்கூட்டியே களையவே, இந்த ஒத்திகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதுகுறித்து லூதியான மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி கூறுகையில், ‘இரண்டாவது நாள் சோதனை ஓட்டம் நிறைவு பெற்றது. 7 மையங்களில் நடந்த இந்த சோதனை ஓட்டத்தில், தடுப்பூசி போடும் நடைமுறைகள் ஊழியர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டது. இந்த சோதனை ஓட்டம் முழு அளவில் வெற்றி பெற்றது’ என்று அவர் கூறினார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்