இந்தியா-சீனா எல்லையில் மீண்டும் மோதல்... என்ன தான் நடக்குது?.. எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் 'இது' தான்!.. சீனா அடித்த பல்டி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நாங்கள் ஒருபோதும் மற்ற நாட்டின் ஒரு அங்குல நிலத்தை கூட ஆக்கிரமிக்கவில்லை என்றும், ஒருபோதும் எந்தப் போரையும் தூண்டவில்லை எனவும் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங் தெரிவித்து உள்ளார்.

லடாக்கின் கிழக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அத்துமீறிய சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் கடந்த மாதம் 15-ந் தேதி ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 35 பேர் உயிர் இழந்தனர். ஆனால், சீன தரப்பில் உயிரிழப்பு விவரங்களை வெளியிடவில்லை.

கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் ரோந்து புள்ளி 15 இல் ஆரம்ப படைகள் விலகி கொண்டாலும் பாங்கோங் ஏரி மற்றும் ரோந்து புள்ளி 17 ஏ என அழைக்கப்படும் கோக்ரா-ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியிலிருந்து செல்ல சீனா தயக்கம் காட்டுகிறது.

லடாக் எல்லையில் நேற்று சீன ராணுவம் மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது. பாங்கோங் ஏரியின் தெற்கு கரை பகுதியில் சீன படையினர் அத்துமீறலில் ஈடுபட்டனர். சீன ராணுவத்தினரை இந்திய ராணுவம் விரட்டியடித்துள்ளது.

ஆனால், இந்த குற்றச்சாட்டை சீன ராணுவம் மறுத்துள்ளது. நாங்கள் ஒருபோதும் மற்ற நாட்டின் ஒரு அங்குல நிலத்தை கூட ஆக்கிரமிக்கவில்லை என்று சீனா கூறியுள்ளது.

சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங், "சீனா ஒருபோதும் எந்தவொரு போரையும் மோதலையும் தூண்டவில்லை, சீன ராணுவம் ஆகஸ்ட் 29 மற்றும் 30 தேதிகளில் இரவு கிழக்கு லடாக்கிலுள்ள பாங்கோங் த்சோவின் தென் கரையில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடக்கவில்லை.

சில தகவல்தொடர்பு சிக்கல்கள் இருந்திருக்கலாம். இரு நாடுகளும் தொடர்ந்து உறவுகளில் நல்லெண்ணத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். எல்லையில் அமைதியை உறுதி செய்ய வேண்டும்.

இரு தரப்பினரும் உண்மைகளை புரிந்து கொள்ள வேண்டும் மற்றும் இருதரப்பு உறவுகளைப் பேணுவதில் நல்லெண்ணம் இருக்க வேண்டும். எல்லையில் அமைதியைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்."

இந்தியத் தூதரக செய்தித் தொடர்பாளர் ஜி ரோங், இந்திய வீரர்கள் எல்லையை கடந்து, சீன பிராந்தியத்தில் அமைதியை சேதப்படுத்துவதாக குற்றம் சாட்டியதை அடுத்து இந்த கருத்துகள் வந்துள்ளன.

இந்த நிலையில், ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி இது குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில் கூறியதாவது, "கிழக்கு லடாக் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இந்தியா - சீனா இடையே பிரச்சினை உள்ளது. இரு நாடுகளும் இடையேயான எல்லை இன்னும் வரையறுக்கப்படவில்லை என்பதன் காரணமாகவே பிரச்சினை ஏற்படுகிறது" என்றார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்