'இங்கிலாந்தில் வேகமாக பரவும் புதிய வகை கொரோனா'... மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில், இங்கிலாந்தில் புதியவகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதில் அதிர்ச்சியான செய்தி என்னவென்றால் இந்த புதிய வகை வைரஸ் பழைய கொரோனா வைரசை விட மிகவும் வேகமாகப் பரவுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால், அந்நாட்டில் பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தச்சூழ்நிலையில் இங்கிலாந்தில் புதியவகை கொரோனா பரவுவது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  அந்நாட்டுடனான விமான போக்குவரத்தைப் பல நாடுகள் தடை செய்துள்ளன. ஆஸ்திரியா, இத்தாலி,பெல்ஜியம், நெதர்லாந்து, சவுதி அரேபியா, துருக்கி எனப் பல நாடுகள் இங்கிலாந்துடனான விமான போக்குவரத்தைத் தடை செய்துள்ளன.

இந்நிலையில் இந்தியாவும் இங்கிலாந்துடனான விமான போக்குவரத்து சேவைக்கு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. இங்கிலாந்திலிருந்து இந்தியா வரும் அனைத்து வகை விமானங்களுக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. புதிய வகை கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டே இந்த விமான போக்குவரத்து தடை அமல்படுத்தப்படுகிறது.

இந்த தடை உத்தரவானது நாளை (டிசம்பர் 22) இரவு 11.59 மணி முதல் டிசம்பர் 31 இரவு 11.59 மணி வரை அமலில் இருக்கும் என இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்