‘வேகவேகமாக வெளியேறும் மக்கள்’.. ஆப்கானில் இருந்து சீக்கிரம் இந்தியா வர ‘விசா’ முறையில் புதிய மாற்றம்.. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வருவதற்கான விசா கட்டுப்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சகம் தளர்த்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கும், அந்நாட்டு அரசுக்கும் இடையே பல ஆண்டுகளாக நடந்து வந்த போர் முடிவுக்கு வந்தது. இதில் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர். ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் வசம் வந்துவிட்ட செய்தி வந்ததுமே, உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் நாட்டுத் தூதரகங்களைக் காலி செய்யும் பணிகளை தொடங்கின.

அந்த வகையில், இந்தியாவும் ஆப்கானிஸ்தானில் உள்ள நம் நாட்டு மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. நேற்று முன்தினம் 129 பேருடன் ஆப்கானிஸ்தானில் இருந்து ஒரு விமானம் இந்தியா வந்தது. இதனிடையே நேற்று காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட களேபரத்தால் திடீரென விமான நிலையம் மூடப்பட்டது. இதனால் எந்த விமானமும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று (17.08.2021) அதிகாலை காபூல் விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது. இதனை அடுத்து 120 இந்திய அதிகாரிகளுடன் காபூலில் இருந்து இந்தியாவுக்கு 2-வது விமானம் புறப்பட்டுள்ளது.

இதனிடையே ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் இந்தியா வருவதற்கான விசா முறையில் சில தளர்வுகளை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஆன்லைனில் சீக்கிரமாக விசா பெறும் வகையில் புதிய முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் பதற்றம் நிலவி வரும் நிலையில், அந்நாட்டு மக்கள் விரைவாக இந்தியா வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்