துடிதுடித்த மூதாட்டி.. டாய்லெட் கிளீனர் + தைலம் கலந்த Eye Drops.. அதிர்ந்த அபார்ட்மெண்ட்.. விசாரணையில் திடுக்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தெலுங்கானா : ஹைதராபாத் பகுதியை அடுத்த செகந்திராபாத்தில் ஒரு அபார்ட்மெண்ட் அமைந்துள்ளது. இதில், ஹேமாவதி என்பவர் தனியாக வசித்து வருகிறார் (வயது 73).

Advertising
>
Advertising

ஹேமாவதியின் கணவர் ஏற்கனவே இறந்து போன நிலையில், அவரின் மகனான சஷிதர், லண்டனில் வேலை பார்த்து வருகிறார்.

வீட்டு வேலை செய்யும் பெண்

இதனால், தனியாக இருக்கும் தன்னுடைய அம்மாவை கவனித்துக் கொள்ள வேண்டி, பார்கவி (வயது 30) என்ற பெண்ணை வீட்டோடு வேலைக்கு வைத்துள்ளார் சஷிதர். கடந்த ஒரு வருடமாகவே, ஹேமாவதியின் வீட்டில் தான் வேலை பார்த்து வருகிறார் பார்கவி. இவருக்கு 7 வயதில் ஒரு மகளும் உள்ளார். ஹேமாவதி தனியாக இருப்பதால், தனது மகளுடன் அபார்ட்மெண்டில் தங்கியுள்ளார் பார்கவி.

கண்ணில் எரிச்சல்

இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து ஹேமாவதிக்கு கண்ணில் எரிச்சல் மற்றும் வலி ஏற்பட ஆரம்பித்துள்ளது. அதிகம் கண்ணைத் தேய்த்து கொண்டும் அவர் இருந்து வந்துள்ளார். இதனைக் காரணமாக வைத்து, பார்கவி செய்த செயல் தான், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண் ஊற்றிய Eye Drops

கழிப்பறையை கழுவ பயன்படுத்தும் திரவம் மற்றும் தலைவலிக்கு தேய்க்கும் தைலம் ஆகியவற்றை தண்ணீரில் கலந்து, ஹேமாவதியின் கண்ணில் துளி துளியாகி ஊற்றி வந்துள்ளார் பார்கவி. இதன் காரணமாக அடுத்த சில தினங்களில், ஹேமாவதிக்கு கண் எரிச்சல் அதிகரித்துக் கொண்டே இருந்துள்ளது. தினமும் கண் வலியாலும் துடிதுடித்துள்ளார் ஹேமாவதி.

மோசமான நிலை

கண் வலி பற்றி, லண்டனில் இருக்கும் மகன் சஷிதரிடம் ஹேமாவதி தெரிவித்துள்ளார். பயந்து போன அவர், உடனடியாக டாக்டரை போய் சந்திக்கவும் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து, அருகேயுள்ள ஆஸ்பத்திரியில் சென்று பார்த்த போது, கண்கள் மோசமான நிலையில் இருப்பதாகவும், ஆனால் இதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை என்றும் கூறியுள்ளனர்.

விஷத்தன்மையுள்ள திரவம்

இதனிடையே, தன்னுடைய கண் பார்வையை முற்றிலுமாக இழந்துள்ளார் ஹேமாவதி. இதனால், குழப்பத்தில் இருந்த மகன் சஷிதர், ஹைதராபாத் வந்து, தன்னுடைய தாயை அதே பகுதியிலுள்ள பிரசாத் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, ஹேமாவதியை பரிசோதனை செய்து பார்த்ததில், அவருடைய கண்ணில் ஏதோ விஷத்தன்மையுள்ள திரவம் ஊற்றப்பட்டு, அதன் மூலம் அவர் கண் பார்வையையும் இழந்தது தெரிய வந்துள்ளது.

இதனால், ஹேமாவதியின் குடும்பத்தினர், பார்கவி மீது சந்தேகப்பட்டுள்ளனர். போலீசிடம் அவர்கள் புகாரளிக்க, பார்கவியை போலீசார் விசாரணை செய்த போது, மேலும் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியிருந்தது.

திருட பிளான் போட்ட பெண்

வீட்டிலுள்ள பணம் மற்றும் நகையைத் திருட வேண்டித் தான், ஹேமாவதியின் கண்ணில், அப்படி ஒரு திரவத்தை ஊற்றியதாக பார்கவி ஒப்புக் கொண்டுள்ளார். மொத்தமாக, 40,000 ரூபாய் பணம், இரண்டு தங்க வளையல் மற்றும் ஒரு தங்க செயினை பார்கவி திருடியுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இவை அனைத்தையும் பார்கவியிடம் இருந்து பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். பணம் மற்றும் நகைகளைத் திருட வேண்டி, மூதாட்டி ஒருவரின் கண் பார்வையை இழக்க செய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

EYE DROPS, LIQUID, THEFT, PLAN, MAID

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்