உலகிலேயே 2-வது பெரிய ‘ஆட்கொல்லி’ நோய்.. 4 மாநிலங்களில் பரவும் ‘கருங்காய்ச்சல்’.. மத்திய சுகாதார அமைச்சர் தகவல்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நான்கு மாநிலங்களில் கருங்காய்ச்சல் பரவி வருவதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம், பிஹார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்களில் உள்ள 54 மாவட்டங்களில் காலா அசார் (Kala Azar) எனப்படும் கருங்காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சல் குறித்து  மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பிகார் சுகாதார அமைச்சர் மங்கல் பாண்டே, மேற்கு வங்க சுகாதாரம் மற்றும் குடும்ப நல இணை அமைச்சர் சந்திரிமா பட்டாச்சார்யா, உத்தரப்பிரதேச மருத்துவம், சுகாதாரம், குடும்ப நலம் மற்றும் தாய் சேய் நல அமைச்சர். ஜெய் பிரதாப் சிங், ஜார்கண்ட் சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நல அமைச்சர். பன்னா குப்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய அமைச்சர் ஹர்ஷ் வர்தன், ‘மலேரியாவுக்குப் பிறகு உலகிலேயே இரண்டாவது பெரிய ஆட்கொல்லி நோய் கருங்காய்ச்சல் ஆகும். முறையான சிகிச்சை அளிக்கப்படாததால், 95 சதவீதம் பேர் இந்த நோயினால் உயிரிழக்கின்றனர்’ என அவர் தெரிவித்துள்ளார். மேலும் முறையாக சிகிச்சை அளிக்கப்பட்டவர்களில் 20 சதவீதம் பேருக்கு சிகிச்சை முடிந்த சில மாதங்களுக்குப் பின் ஒரு வகையான தோல் நோய் ஏற்படுவதாக அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். இந்த கருங்காய்ச்சல் அசாம், ஹிமாச்சலப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், கேரளா, சிக்கிம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் குறைந்த அளவு பாதிப்புகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்