'திபு திபுவென கல்யாண மண்டபத்திற்கு வந்த இளம்பெண்'... 'அவரை பார்த்து வேர்த்து விறுவிறுத்து போன புது மாப்பிள்ளை'... அடுத்த நாள் திருமணத்தில் நடந்த பெரிய ட்விஸ்ட்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் பைதி பைந்தூர்நாலா கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன். இவருக்கும் சிருங்கேரியைச் சேர்ந்த சிந்து என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. அவர்களின் திருமணம் சிருங்கேரியில் நேற்று நடக்க இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் இருவீட்டாரும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டார்கள்.

இந்நிலையில் திருமண வரவேற்பு முடிந்து அனைவரும் ஓய்வு எடுக்க அவரவர் அறைக்குச் சென்று விட்டார்கள். மணமகன் நவீன் தனது அறைக்கு ஓய்வு எடுக்கச் சென்றுள்ளார். அப்போது திடீரென அவரை பார்க்க இளம்பெண் ஒருவர் அதிரடியாக வந்துள்ளார். அந்த இளம்பெண்ணைப் பார்த்ததும் புதுமாப்பிள்ளை நவீன் வேர்த்து விறுவிறுத்துப் போனார். அவர் புதுமாப்பிள்ளை நவீனின் முன்னாள் காதலி ஆவார்.

அந்த இளம்பெண் திருமண மண்டபத்திற்கு வருவார் எனச் சிறிதும் நினைக்காத நவீன் என்ன செய்வது எனப் புரியாமல் தவித்து நின்றுள்ளார். அப்போது அந்த இளம்பெண், ''என்னைக் காதலித்து விட்டு எப்படி வேறொரு பெண்ணை உன்னால் திருமணம் செய்ய முடியும் எனக் கேட்டுள்ளார். அதோடு என்னை ஏமாற்றிவிட்டு திருமணம் செய்துகொண்டால், நாளை காலை மண்டபத்துக்கு வந்து அனைவர் முன்னிலையிலும் உண்மையைக் கூறி திருமணத்தை நிறுத்திவிடுவேன்'' என்று மிரட்டி உள்ளார்.

இதனால் பயந்துபோன நவீன் அந்த பெண்ணுடன் நேற்று முன்தினம் இரவே திருமண மண்டபத்திலிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை திருமணத்துக்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது. உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் திருமணத்துக்காக மண்டபத்துக்கு வந்தனர். தாலி கட்டும் நேரமும் நெருங்கி வந்தது. ஆனால் மாப்பிள்ளை நவீன் மணிமேடைக்கு வரவில்லை. இதையடுத்து அவரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அவரது அறைக்குச் சென்று பார்த்துள்ளார்கள்.

அப்போது தான் முன்தினம் இரவு நடந்த அனைத்தும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தால் என்ன செய்வது எனத் தெரியாமல் மணமகனின் பெற்றோர் தவித்து நின்ற நிலையில், மணமகள் என்ன நடக்கிறது எனத் தெரியாமல் மணிமேடையில் பரிதாபமாக இருந்துள்ளார். இதனால் திருமணம் நிற்கும் நிலைக்குச் சென்ற நிலையில், அங்குத் திருமணத்துக்கு வந்திருந்த சிருங்கேரி தாலுகா நந்திக் கிராமத்தைச் சேர்ந்த சந்துரு என்பவர் சிந்துவைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி முன்வந்தார்.

இதனால் பெண் வீட்டார் நிம்மதி அடைந்தனர். இதையடுத்து அதே முகூர்த்தத்தில் மணப்பெண் சிந்துவை, சந்துரு திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு வந்த அனைவரும் மணமக்களை வாழ்த்திச் சென்றனர். மாப்பிள்ளையான சந்துரு, சிக்கமகளூருவில் அரசு பேருந்து நடத்துநராக வேலை பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்