'இப்படியெல்லாம் போட்டோ எடுக்காதீங்க...' 'இதுலையுமா விளம்பரம் தேடிப்பீங்க...?' கண்டித்து உத்தரவிட்ட மாநில அரசு...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா வைரஸ் பரவுவதால் தனது வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு உதவும் போது நாம் புகைப்படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும் எனவும், இது போட்டி போட்டுக்கொள்ளும் நேரமில்லை எனவும் காட்டமாக கூறியுள்ளது ராஜஸ்தான் அரசு.

இந்தியா முழுவதும் நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவால் தினக்கூலிக்கு செல்லும் தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பு மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். மத்திய மற்றும் அந்தந்த மாநில அரசுகள் இது போன்ற கூலி தொழிலாளர்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகின்றது.

பல்வேறு இடங்களில் ஆதரவற்ற மனிதர்களுக்கு அரசும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இணைந்து உதவி செய்து வருகிறார்கள். இம்மாதிரியான இக்கட்டான சூழலில் மக்களுக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி சத்தமில்லாமல் பலர் உதவி செய்தாலும், ஒரு சிலர் சமூக வலைதளத்தில் பதிவிட்டு விளம்பரம் தேடிக்கொண்டு தான் இருக்கின்றனர்.

அதுபோல சமீபத்தில் மூன்று நபர்கள் ஒரு கொரோனா நோயாளிக்கு இரண்டு வாழைப்பழங்களைக்  கொடுப்பதுபோல் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது.

இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ராஜஸ்தான் அரசு ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கும்போது புகைப்படங்கள் எடுக்க தடை விதித்துள்ளது. மேலும், இம்மாதிரி ஆதரவற்ற, உதவி தேவைப்படுவோருக்கு நம்மால் முடிந்த உதவியை நாம் நமது கடமையாகவும், சேவையாகவும் கருதி தான் செய்யவேண்டும். இதை விளம்பரப்படுத்திக்கொள்ள போட்டோ எடுக்கக்கூடாது. நல்ல விஷயங்களை நாம் போட்டி போட்டு செய்ய வேண்டாம் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

மேலும் தொண்டு நிறுவனங்கள் உதவி செய்வதை மாவட்ட ஆட்சியர்கள் ஊக்குவிக்க வேண்டும் எனவும், அதேவேளையில் நாம் அனைவரும் சமூக இடைவெளி பின்பற்றி உதவி செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்