‘அந்த மனசுதான்’...!!! ‘இவ்ளோ உயரத்துக்கு கொண்டு போயிருக்கு’... ‘தனி ஒருவராக இந்திய மனிதரின் சாதனைக்கு!!’... 'அமெரிக்காவில் கிடைத்த வெகுமதி’!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தனி ஒருவராக சாதனை புரிந்த, அசாமைச் சேர்ந்த 57 வயது விவசாயி ஜாதவ் பயேங்கின் வாழ்க்கை வரலாறு, அமெரிக்க பாடப்புத்தகங்களில் பாடத்திட்டமாக சேர்க்கப்பட்டுள்ளது.

கிழக்கு அசாமில் உள்ள மஜூலித் தீவின் சுற்றுச்சூழல் கெடுதலைக் குறித்து சிறுவயதிலேயே கவலைகொள்ளத் தொடங்கினார் ஜாதவ் பயேங். அதனை நினைத்து வருந்திக் கொண்டிருக்காமல், மனது வைத்து மரங்களை நடத்தொடங்கி காடுகளாக வளரும் வகையில் செயல்பட்டார் ஜாதவ் பயேங். தன் ஈடு இணையற்ற உழைப்பைச் செலுத்தி தனி ஒருவராக 550 ஹெக்டேர் காட்டை உருவாக்கிக் காட்டினார் ஜாதவ் பயேங். அடர்ந்த காடுகளால் அங்கு யானை, காண்டாமிருகம், புலி என பல விலங்கினங்களும் அக்காட்டுப் பகுதிக்குள் வாழத் தொடங்கிவிட்டன.

தரிசு மணல் பகுதியில், அடர்த்தியான ஒரு காட்டையே உருவாக்கியதால் ’Forest man of India' என்று அழைக்கப்படும் இவரின் அளவில்லாத சேவையைப் பாராட்டி பத்மஸ்ரீ பட்டமும், கர்மயோகி விருதும் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவின் பிரிஸ்டெல் கனெக்டிக்கட்டில் இருக்கும் பள்ளிகளின் 6- ம் வகுப்பு பாடத்திட்டத்தில் அசாம் ஜாதவ் பயேங்கின் வாழ்க்கை வரலாறு பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது.

அங்குள்ள மாணவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கல்வியில் ஒரு பகுதியாக ஜாதவின் சாதனைகளைக் குறித்து படிக்கிறார்கள் என அங்கு பணிபுரியும், இந்திய வம்சாவளி ஆசிரியர் நவாமி சர்மா தெரிவித்திருக்கிறார். ஜாதவ் பயேங்கின் வாழ்க்கை குறிப்பு, மாணவர்களின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அக்கறையை ஊக்கப்படுத்தும் என்று ஆசிரியர் நவாமி சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார். எதையும் மனது வைத்து செய்தால், மார்க்கம் உண்டு என்பதற்கு ஜாதவ் பயேங்கின் வாழ்க்கை எடுத்துக்காட்டாக மாறியிருப்பதாகவே சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கருதுகின்றனர். ஜாதவின் இந்தப் பாராட்டுக்கு நெட்டிசன்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்