'கொன்னுட்டு பாத்ரூம்ல வழுக்கி விழுந்ததா சொல்றாங்க...' 'மனைவி சாப்பிடும் மாத்திரைகளில் என்ன கலந்தார் தெரியுமா..?' வரதட்சணைக்காக நடந்த பயங்கரம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சித்தூர் மாவட்டத்தில் வரதட்சணைக்காக மனைவி சாப்பிடும் மருந்து மாத்திரைகளில் சயனைடு வி‌ஷத்தை கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து மனைவியைக் கொன்ற வங்கி அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.

சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி சே‌ஷப்ப தோப்பு பகுதியை சேர்ந்தவர் ரவி சைதன்யா (வயது 35). மதனப்பள்ளியில் உள்ள வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஆமனி (27). இவர் கடந்த மாதம் 27-ந்தேதி மர்மமான முறையில் இறந்துவிட்டார்.

இறந்த அன்று ஆமனி கழிவறையில் மயங்கி விழுந்துக் கிடப்பதாக அருகில் இருந்தவர்கள் தொலைபேசியில் தகவல் தெரிவித்ததால், வீட்டிற்கு சென்று ஆமனியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்ததாக டாக்டர்களிடம் ரவிசைதன்யா தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து டாக்டர்கள் ஆமனிக்கு முதல்கட்ட சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக மதனப்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆமனி உயிரிழந்தார்.

இது சாதாரண மரணம் என மருத்துவர்களும், போலீசாரும் கருதினர். அதனால் ரவிசைதன்யா கேட்டவுடன் பிரேத பரிசோதனை செய்யாமல் உடலை அளிக்க முன்வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆமனியின் தாய் லட்சுமி தேவி, தந்தை ஜோகி, நாகேந்திரராவ் ஆகியோர் தங்கள் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக மதனப்பள்ளி  டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

வரதட்சணை கேட்டு தன் மகளை கொடுமைப்படுத்தி வந்ததாகவும், கொலை செய்துவிட்டு கழிவறையில் விழுந்து இறந்து விட்டதாக நாடகமாடுவதாகவும் புகாரில் கூறியிருந்தனர். ஆமனியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் கூடுதல் வரதட்சணை கேட்டதாக கணவர் மற்றும் ஆமனியின் மாமியார், மாமனார் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் சயனைடு பயன்படுத்தி ஆமனி இறந்திருப்பதாக டாக்டர்கள் மருத்துவ அறிக்கை கொடுத்தனர். அதைத்தொடர்ந்து வங்கி மேலாளர் ரவி சைதன்யாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ரவிசைதன்யா, அவருடைய மனைவி ஆமனிக்கு மருந்து மாத்திரைகளில்  சயனைடு கலந்து  கொடுத்து கொன்றதாக விசாரணையில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

இதனால் மனைவியை சயனைடு கொடுத்து கொலை செய்ததாக வழக்கை மாற்றி ரவிசைதன்யாவையும், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியாக ரவி சைதன்யாவின் பெற்றோரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

MURDER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்