'மீண்டும் உயர்ந்த கியாஸ் சிலிண்டர் விலை'... 'நடுத்தர மக்களுக்கு மேலும் சுமையை கொடுக்கும்'... அதிர்ச்சியில் பொதுமக்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கியாஸ் சிலிண்டர் விலை இந்த மாதம் மீண்டும் ரூ.50 உயர்ந்துள்ளது, இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியக் குடும்பங்கள் வருடத்துக்கு 12 சிலிண்டர்களை மானிய விலையில் பெற்றுக்கொள்ள முடியும். 12 சிலிண்டருக்கு பிறகு ஆர்டர் செய்யும் ஒவ்வொரு சிலிண்டருக்கும் மானியமில்லாமல் தான் வாங்க முடியும். வீடுகளுக்கு 14.2 கிலோ எடையிலும், ஓட்டல்கள் மற்றும் இதர வர்த்தக பயன்பாடுகளுக்கு 19 கிலோ எடையிலும், மலைப்பாங்கான இடங்களில் உள்ள வீடுகளுக்கு 5 கிலோ எடையிலும் சமையல் கியாஸ் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

இதனிடையே சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் மானியம் இல்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் மற்றும் வர்த்தக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை மாதந்தோறும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு மாதமும் 1-ந்தேதி சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டுவருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி ஒரு சிலிண்டர் விலை ரூ.734 என நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால் பிப்ரவரி மாதம் சிலிண்டர் விலை அதிரடியாக ரூ.147 அதிகரித்து ரூ.881-க்கு விற்பனை ஆனது. அதனைத்தொடர்ந்து சிலிண்டர் விலை படிப்படியாக குறைந்தது. கடந்த ஆகஸ்டு மாதம் சிலிண்டர் விலை ரூ.610 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் இந்த மாதத்திற்கான கியாஸ் சிலிண்டர் விலை கடந்த 1-ந்தேதி மாற்றி அறிவிக்கப்பட்ட நிலையில், மானியம் இல்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.660 ஆக உயர்த்தப்பட்டு இருந்தது. அந்தவகையில் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 அதிகரித்திருந்தது.

இந்த சூழ்நிலையில் இந்த மாதம் முடிவதற்குள்ளாகவே கியாஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ரூ.660 ஆக இருந்த கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து, தற்போது ரூ.710-க்கு விற்பனை ஆகிறது. ஏற்கனவே பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்லும் நிலையில், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு நடுத்தர மக்களுக்கு மேலும் சுமையைக் கொடுக்கும் எனப் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளார்கள்.

மற்ற செய்திகள்