'கணவனுக்கு வந்த மனைவியின் ஆபாச போட்டோ'... 'ஆனா கணவன் மீதே புகார் கொடுத்த மனைவி'... 'கூடவே இருந்து இந்த வேலையை பார்த்த நபர்'... அதிர்ச்சி சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தங்கை முறை கொண்ட பெண்ணை அடைவதற்காக மருத்துவர் ஒருவர் செய்த செயல் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுபு. இவர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சுபுவின் தங்கை முறை கொண்ட ஒரு இளம்பெண் திருமணம் செய்து கொண்டு கணவருடன் வசித்து வந்துள்ளார். ஆனால் அந்த பெண்ணின் மீது சுபுவிற்கு ஆசை இருந்து வந்துள்ளது. அவரை எப்படியாவது அடைய வேண்டும் என திட்டம் போட்டுள்ளார். அந்த பெண்ணை இரண்டாவதாகத் திருமணம் செய்ய முடிவு செய்த சுபு, அந்த பெண்ணையும் அவரின் கணவரையும் பிரிக்கும் முயற்சியில் இறங்கினார்.

தனது முதல் முயற்சியாக, அந்த பெண்ணின் நடத்தை சரி இல்லை எனக் கூறி, அந்த பெண்ணின் கணவருக்கு மொட்டை கடிதம் எழுதிப் போட்டுள்ளார். இதைப் பார்த்து அதிர்ந்து போன பெண்ணின் கணவர், மருத்துவர் சுபுவையும் அழைத்துக் கொண்டு காவல்நிலையத்தில் சென்று புகார் அளித்துள்ளார். ஆனால் இது பெரிய அளவில் பிரச்சனையாக மாறாத காரணத்தால், அந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது உறவினர்களின் வாட்ஸ்ஆப்பிற்கு அந்த பெண்ணின் ஆபாசப் படங்களை அனுப்பி வைத்துள்ளார். இது பூதாகரமாக வெடித்த நிலையில், தனது கணவர் தான் இப்படிச் செய்திருக்க வேண்டும் என எண்ணிய அந்த பெண், கணவர் மீதே காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த பெண் காவல்நிலையத்திற்குச் செல்லும் போது, சுப்புவும் கூடவே சென்று தன்னை நல்லவன் போலக் கட்டிக்கொண்டுள்ளார். இந்த சூழ்நிலையில் அந்த தம்பதிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து சென்றார்கள். இதனால் சுபு மகிழ்ச்சியில் திளைத்துள்ளார். கணவன் மனைவி இருவரும் பிரிந்ததை அறிந்த போலீசார், இதில் ஏதோ மர்மம் இருக்கிறது என்பதை உணர்ந்து, இந்த சம்பவங்கள் குறித்து விசாரிக்க உதவி ஆணையர் பிரதாப சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் வாட்ஸ்ஆப்பிற்கு போட்டோ அனுப்பப் பயன்படுத்திய மொபைல் எண்ணை ஆய்வு செய்தார்கள். அதில் நெடுமங்காடு பகுதியை சேர்ந்த ஸ்ரீஜித் என்பவர் ஆபாச படங்களை அனுப்பப் பயன்படுத்திய சிம் கார்டை வாங்கியது தெரியவந்தது. அவர் அந்த சிம் கார்டை தனது நண்பரும், டிவி நடிகருமான ஜாஸ்மிர்க்கானுக்கு கொடுத்திருக்கிறார். இவரும் மருத்துவர் சுபுவும் நண்பர்கள் என்பதால், சுபு கூறியபடி ஜாஸ்மிர்கான் இளம்பெண்ணின் படங்களை மார்பிங் செய்து அதை ஆபாசமாக மாற்றி வாட்ஸ்ஆப்பில் அனைவருக்கும் அனுப்பியுள்ளார்.

காவல்துறையினரின் விசாரணையில் இது அனைத்தும் தெளிவான நிலையில், மருத்துவர் சுபு, டிவி நடிகர் ஜாஸ்மிர்கான் மற்றும் ஸ்ரீஜித் ஆகியோரை கைது செய்தார்கள். இதில் ஸ்ரீஜித் ஜெராக்ஸ் கடை நடத்தி வரும் நிலையில், அவரது கடைக்கு ஜெராக்ஸ் எடுக்க வந்த நபரின் ஆதார் நகலைத் திருட்டுத்தனமாக எடுத்து அதன்மூலம் சிம் கார்டு வாங்கி, அந்த எண் மூலம் ஆபாச படங்களை அனுப்பியது வெட்டவெளிச்சமானது. போலீசார் தங்களை எப்படியும் கண்டுபிடிக்க முடியாது என நினைத்த நிலையில், காவல்துறையினரின் தீவிர விசாரணையில் மூவரும் சிக்கியுள்ளார்கள்.

இதற்கிடையே மகிழ்ச்சியாக வாழ்ந்த தம்பதியர் பிரிய இவர்கள் தான் காரணம் என்பதால், அவர்களை அழைத்து நடந்த உண்மையை எடுத்துக் கூறிய போலீசார் மீண்டும் மகிழ்ச்சியாக வாழ்க்கையைத் தொடங்குங்கள் என்றும், கணவன், மனைவி என இருவரை பற்றி யார் தவறாகக் கூறினாலும் அதை நம்பாமல் இருவரும் அமர்ந்து பேசி அனைத்தையும் சரி செய்து கொள்ளுங்கள் என அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்கள்.

இதனிடையே பிரிந்து சென்ற இளம் தம்பதியரை தங்களின் விசாரணை மூலம் உண்மையை வெளிக்கொண்டு வந்து அவர்கள் மீண்டும் இணையக் காரணமாக இருந்த போலீசாரை அந்த பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினார்கள். ''கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய்'' என்பதை நிரூபிக்கும் வகையில் நடந்துள்ளது இந்த சம்பவம்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்