'ஒரு பக்கம் தட்டுப்பாடு'... 'தடுப்பூசி வீணாக்குவதில் முதலிடத்தில் இருக்கும் மாநிலம்'... வெளியான பரபரப்பு தகவல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளா மற்றும் மேற்கு வங்காளம் மாநிலங்கள் எந்தவித வீணாக்கலும் இல்லாமல் தடுப்பூசியைப் பயன்படுத்தி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணிகள் மின்னல் வேகத்தில் நடந்து வருகின்றன. பல்வேறு கட்டங்களாக தடுப்பூசி திட்டத்தைச் செயல்படுத்தி வரும் மத்திய அரசு, உற்பத்தியாளர்களிடம் இருந்து தடுப்பூசியை நேரடியாகக் கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.

இவ்வாறு பெறப்படும் தடுப்பூசிகளை மாநிலங்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் மக்களுக்குப் பயன்படுத்தி வருகின்றன. இந்தச்சூழ்நிலையில் பல மாநிலங்களில் தடுப்பூசி டோஸ்கள் அதிக அளவில் வீணாவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக நாடு முழுவதும் தடுப்பூசி டோஸ்களை வீணாக்கும் மாநிலங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதனடிப்படையில் ஜார்கண்ட் மாநிலம் 33.95 சதவீத தடுப்பூசி டோஸ்கள் வீணாகி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப்போல சத்தீஸ்கர் 15.79 சதவீதம், மத்தியப் பிரதேசம் 7.35 சதவீத டோஸ்களை வீணாக்கியுள்ளன. பஞ்சாப் (7.08), டெல்லி (3.95), ராஜஸ்தான் (3.91), உத்தரப்பிரதேசம் (3.78), குஜராத் (3.63), மராட்டியம் (3.59) போன்ற மாநிலங்களும் தடுப்பூசி டோஸ்களை வீணாக்கி இருக்கின்றன.

இப்படிப் பல மாநிலங்கள் தடுப்பூசியை வீணாக்குவது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், சில மாநிலங்கள் ஒரு டோசையும் வீணாக்காமல், வீணாகும் டோஸ்களாக கணக்கிடப்படும் தடுப்பூசியைக் கூட போட்டுச் சாதித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அந்தவகையில் கேரளா மற்றும் மேற்கு வங்காளம் மாநிலங்கள் எந்தவித வீணாக்கலும் இல்லாமல் தடுப்பூசியைப் பயன்படுத்தி வருகின்றன. இந்த மாநிலங்களில் வீணாகும் தடுப்பூசி விகிதம் முறையே -6.37 சதவீதம், -5.48 சதவீதம் என எதிர்மறை விகிதத்தில் உள்ளன.

கடந்த 7-ந்தேதி வரை நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்ட பிரிவினரில் 38 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். இதில் திரிபுராவில் 92 சதவீதமும், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் தலா 65 சதவீதம், குஜராத்தில் 53 சதவீதம், கேரளாவில் 51 சதவீதம், டெல்லியில் 49 சதவீதம் போடப்பட்டு உள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்