படிச்சது 10-வது தான்..ஆனா சைபர் திருட்டில் இந்தியா முழுவதும் 1,352 கேஸ்.. பல மாநில காவல்துறையால் தேடப்பட்ட இளைஞர்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியா முழுவதும் சைபர் திருட்டு வழக்கில் பல்வேறு மாநில காவல்துறையால் தேடப்பட்டு வந்த இளைஞர் ஒருவர் சண்டிகர் மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

Advertising
>
Advertising

கார்டு மேல இருக்க 16 நம்பர் சொல்லுங்க

ஹரியானாவின் ஃபதேஹாபாத் பகுதியை சேர்ந்தவர் விகாஸ் என்ற விக்கி குமார். 10 ஆம் வகுப்பு மட்டுமே முடித்திருக்கும் இவர் மீது இந்தியா முழுவதும் 1,352 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அத்தனையும் சைபர் திருட்டு வழக்குகள். இதனால் பல மாநில காவல்துறையினர் விக்கி குமாருக்கு வலைவீசி வந்த நிலையில் தற்போது சண்டிகர் மாநில காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார் விக்கி குமார்.

குர்ஜீத் கவுர் என்ற பெண்மணிக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் போன் செய்த விகாஸ், தான் வங்கியிலிருந்து பேசுவதாகவும் கிரெடிட் கார்டு குறித்த விபரங்களை உடனடியாக தராவிட்டால் கார்டு பிளாக் ஆகிவிடும் என்று கூற, 46 வயதான குர்ஜீத் கவுர் என்ற பெண்மணியும் கிரெடிட் கார்டு விபரங்களை அளித்திருக்கிறார். ஆனால், கொஞ்ச நேரத்தில் அவரது வங்கி கணக்கிலிருந்து 83,979 ரூபாய் மர்மமான முறையில் எடுக்கப்பட்டது அவரை அதிர வைத்திருக்கிறது.

புகார்

இதனையடுத்து கவுர் காவல்நிலையம் சென்று இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்திருக்கிறார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணையை துவங்கிய சண்டிகர் மாநில சைபர் கிரைம் விசாரணை பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், அவரது போன் நம்பரை டிராக் செய்து 23 வயதான விக்கி குமாரை கைது செய்துள்ளனர்.

அவரிடம் இருந்து 4 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே இவரது தகவல்களை மத்திய சைபர் கிரைம் பிரிவுக்கு அளித்த அதிகாரிகளுக்கு மேலும் ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. விகாஸ் மீது இதுவரையில் 1352 சைபர் வழக்குகள் இருப்பதாக மத்திய சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தது தான் இந்த அதிர்ச்சிக்கு காரணம்.

4 பேர்கொண்ட கும்பல்

4 மொபைல் போன்களின் மூலமாகவே, இத்தனை திருட்டிலும் விக்கி ஈடுபட்டு வந்ததாக கூறும் காவல்துறை அதிகாரிகள், அவருடன் தொடர்புடைய 4 பேர்கொண்ட கும்பலை தேடிவருவதாகவும் தெரிவித்துள்ளனர். கொள்ளையடித்த பணத்தில் சொகுசு கார் உள்ளிட்டவற்றை விக்கி வாங்கியுள்ளதாகவும் போலி முகவரியை கொடுத்து வாங்கிய சிம்கார்டுகளின் மூலம் அசாம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் விக்கிக்கு வங்கிக் கணக்கு துவங்கப்பட்டிருப்பதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான சைபர் திருட்டில் ஈடுபட்டுவந்த விக்கி குமாரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

 

CYPERCRIME, CHANDIGARH, POLICE, சைபர்கிரைம், சண்டிகர், கிரெடிட்கார்டு

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்