130 அடி ஆழ ‘ஆழ்துளை’ கிணற்றில் சிக்கிய சிறுவன்.. 8 மணி நேர போராட்டம்.. சாமர்த்தியமாக மீட்ட தமிழகத்து ஐபிஎஸ்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தையை 8 மணி நேர போராட்டத்துக்கு பின் பத்திரமாக மீட்டனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள தரியாய் என்ற கிராமத்தைச் சேர்ந்த 3 வயது சிறுவன் சிவா, நேற்று காலை தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்துள்ளான். இந்த நிலையில் நீண்ட நேரமாக சிறுவனை காணாததால், அவனது பெற்றோர் தேட ஆரம்பித்துள்ளனர். அப்போது வீட்டின் அருகே மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் இருந்து அழுகை சத்தம் கேட்டுள்ளது.

இதனை அடுத்து உடனே ஆழ்துளை கிணற்றை பார்த்தபோது சிறுவன் சிவா உள்ளே சிக்கியிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், பேரிடர் மீட்பு படைவீரர்களுடன் இணைந்து சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மக்கள் நெரிசலால் ஆழ்த்துளை கிணற்றுக்குள் மண்சரிவு ஏற்படாமல் இருக்க போலீசார் தடுப்புகள் அமைத்தனர்.

சுமார் 130 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்படாமல் இருக்க உடனே ஆழ்த்துளை கிணற்றுக்குள் ஆக்சிஜன் குழாய் செலுத்தப்பட்டது. மேலும் சிறுவனின் இருப்பை அறிய சிறிய கேமாரா ஒன்றையும் உள்ளே அனுப்பினர். அப்போது சிறுவன் இரண்டு கைகளையும் மேலே தூக்கியவாறு இருப்பது தெரியவந்தது. மேலும் அவ்வப்போது அவன் கைகளை அசைத்துக் கொண்டிருந்தான்.

இந்த சம்பவம் இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில், ஆக்ராவில் முகாமிட்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள், சிறுவனை மீட்கும் முயற்சியில் கைகொடுத்தனர். இதனை அடுத்து ஆழ்துளை கிணற்றுக்கு அருகே 90 அடி ஆழத்துக்கு விரைவாக பள்ளம் தோண்டப்பட்டது. இதனிடையே சிறுவனின் கைகளில் கயிறை கட்டி மேலே தூக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.

மாலை 4 மணியளவில் சிறுவன் கையை லேசாக அசைக்கவும், அவனது கையில் கயிறு மூலம் லாவகமாக சுருக்குப் போட்டுக் கொண்டனர். இதனை அடுத்து அப்படியே மெதுவாக சிறுவனை மேலே தூக்கி வெளியே கொண்டு வந்தனர். சுமார் 8 மணி நேர போராட்டத்துக்கு பின் சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான். இதனை அடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த மீட்பு பணியை ஒருங்கிணைத்த ஆக்ரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனிராஜ், ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்டது குறித்து தெரிவித்துள்ளார். அதில், ‘பதற்றம் இல்லாமல், முறையான திட்டமிடலுடன் மத்திய, மாநில மீட்புப்படையினரின் ஒருங்கிணைப்பான மீட்பு பணியின் காரணமாக சிறுவனை உயிருடன் மீட்க முடிந்தது’ என காவல் கண்காணிப்பாளர் முனிராஜ் தெரிவித்துள்ளார். இவர் தமிழத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்