‘இந்த அறிகுறி எல்லாம் தென்பட்டா உடனே டாக்டரை பாருங்க’!.. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை தாக்கும் புதிய பூஞ்சை.. ஐசிஎம்ஆர் எச்சரிக்கை..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய பூஞ்சை தொற்று ஏற்படுவதாக ஐசிஎம்ஆர் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. நாளொன்றுக்கு சுமார் 4 லட்சம் பேர் வரை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் நோய் பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம், கேரளா, கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நீண்ட காலமாக நீரிழிவு நோய் உள்ளவர்கள் மற்றும் தீவிர சிகிச்சையில் உள்ளவர்களுக்கு, மியுகோமிகோலிஸ் (Mucormycosis) என்னும் ஒரு வகை கருப்பு பூஞ்சை (Black Fungus) தொற்றால் பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்துள்ளது.

இந்த பூஞ்சை தொற்று மிகவும் ஆபத்தானது என்றும், இவை மனித உடலில் நோய் எதிர்ப்புத் திறனை வெகுவாக குறைத்து விடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆய்வு பூர்வமாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை பூஞ்சை, காற்றில் பறந்து உடல்நலம் குன்றியவர்களின் நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த பூஞ்சை சிலருடைய உயிரிழப்புக்கு காரணமாக இருந்துள்ளதாக பிரபல நிபுணர் மணீஸ் முஞ்சால் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் போது இந்த பூஞ்சை தாக்கம் இருந்ததாகவும், ஆனால் தற்போது இதன் தாக்கம் அதிகமாக காணப்படுவதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. இந்த பூஞ்சை பாதிப்பால் சிறுநீரகம், இதயம் போன்றவை பாதிக்கப்படும் என்றும், கண் பார்வை இழப்பு, எலும்பு மச்சையில் பாதிப்பை உருவாக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கன்னங்கள் மற்றும் கண்களில் வீக்கம், தீவிர மூக்கடைப்பு, கடுமையான தலைவலி, காய்ச்சல், கண்களில் நீர் வடிதல், ரத்த வாத்தி போன்றவை இந்த பூஞ்சை பாதிப்புக்கான அறிகுறிகளாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முதலில் சைனஸ் பிரச்சனையை ஏற்படுத்தும் இந்த ரக பூஞ்சை, அப்படியே பயணித்து மூளை வரை சென்று தாக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இந்த பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில், கடந்த 15 நாட்களில் 40-க்கும் மேற்பட்டவர்கள் இந்த கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 8 பேருக்கு கண் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதனால் இந்த பூஞ்சை தொற்று தொடர்பான அறிகுறிகள் தென்பட்டால், உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என ஐசிஎம்ஆர் அறிவுறுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்