'ஒன்றா, இரண்டா பல கோடி பேரின் பிரார்த்தனை'... '16 கோடி ரூபாய் ஊசிக்கு கிடைத்த சலுகை'... மகளே சீக்கிரம் எழுந்து வா!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கடந்த சில நாட்களாகச் சமூகவலைத்தளங்களில் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர் டீரா காமத். இந்த தேவதைக்கு இப்படி ஒரு வியாதியா என பலரும் நொறுங்கிப்போன நிலையில், தற்போது அதற்கெல்லாம் ஒரு விடிவு காலம் பிறந்துள்ளது.

மும்பையைச் சேர்ந்த 5 மாதக் குழந்தையான டீரா, Spinal Muscular Atrophy என்ற அபூர்வ நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாள்.  'முதுகெலும்பு தசைநாற் சிதைவு' என்று அழைக்கப்படும் இந்த நோயானது ஆறாயிரம் பேரில் ஒருவருக்கு மட்டுமே வரும் தீவிர நோய். பிறக்கும்போது டீரா இயல்பாகத்தான் பிறந்தாள். எல்லா குழந்தைகளையும் போல அழுதாள், சிரித்தாள்.

அவளுக்கு இப்படியொரு பிரச்சினை இருக்கும் என்று நாங்கள் கற்பனை கூடச் செய்யவில்லை" என்கிறார் டீராவின் அம்மா பிரியங்கா. இதனிடையே டீரா பிறந்து ஐந்து மாதங்களே ஆவதால் அவளின் நரம்பு மண்டலம் பெரிதாகப் பாதிக்கப்படவில்லை. தசைகளும் சற்று இயங்குகிறது. இந்த நோய்க்கான மருந்து தான் நடுத்தர மக்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு உச்சத்தில் உள்ளது. இந்த நோய்க்கான தடுப்பூசியின் விலை 16 கோடி ரூபாய்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்யும் டீராவின் பெற்றோர் மருந்தின் விலையைக் கேட்டதும் முதலில் ஆடிப்போனார்கள். ஆனால் நிச்சயம் தங்கள் மகளைக் காப்பாற்றி விட முடியும் என்ற நம்பிக்கையை மட்டும் கைவிடவில்லை. நம்மைச் சுற்றியுள்ள இந்த உலகம் நிச்சயம் தங்கள் மகளுக்கு உதவி செய்யும் என்ற நம்பிக்கையில் Teera_Figths_SMA என்ற ஹேஷ்டேக்யுடன் இணையத்தில் மக்களின் உதவியை நாடினார்கள் டீராவின் பெற்றோர்.

இதனிடையே இந்த, 16 கோடி ரூபாயில், 6 கோடி ரூபாய் மருந்துகளுக்கான, ஜி.எஸ்.டி., மற்றும் இறக்குமதி வரியாகச் செலுத்த வேண்டும். இணையத்தில் டீராவுக்கு உதவப் பலரும் முன்வந்த நிலையில் தற்போது வரை நன்கொடையாக, 12 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த தடுப்பூசிக்கு வரிச் சலுகை அளிக்கும்படி, பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்து, சமூக வலைத்தளத்தில், டீராவின் பெற்றோர் பதிவிட்டிருந்தனர். 

இது குறித்து, பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் மகாராஷ்டிர முதல்வருமான தேவேந்திர பட்னவிஸ், பிரதமர் அலுவலகத்துக்குக் கடிதம் எழுதியிருந்தார். இதைப் பரிசீலனை செய்த பிரதமர் மோடி , 6 கோடி ரூபாய் வரியைத் தள்ளுபடி செய்ய, உத்தரவிட்டு உள்ளார். பிரதமரின் இந்த நடவடிக்கைக்குச் சமூகவலைத்தளங்களில் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறார்கள். கோடிக்கணக்கான மக்களின் பிரார்த்தனை என்றும் வீண் போகாது, ''மகளே டீரா சீக்கிரம் எழுந்து வா''

மற்ற செய்திகள்