இவங்க 2 பேரையும் தமிழ் பிரதிநிதிகளாக எப்படி எடுத்துக்குறது? அரசியல் பிரபலம் கேள்வி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

57 அமைச்சர்களுடன் மீண்டும் பிரதமராக பொறுப்பேற்று இருக்கும் நரேந்திர மோடியின் கேபினட்டில் உள்ள மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோரை தமிழகத்தின் பிரதிநிதிகளாக கருதவே முடியாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சனம் செய்து பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசிய கே.எஸ்.அழகிரி, தமிழகத்தில் வேலூர் நீங்கலாக நடந்து முடிந்த 17-வது மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி ஓரிடத்திலும் மீதமிருந்த 37 இடங்களில் திமுகவும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் - திமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தமிழகத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. எனினும் இந்தியா முழுவதும் பெரும்பான்மையாக வென்ற பாஜக தலைமையிலான பிரதமர் நரேந்திர மோடி 57 அமைச்சர்களுடன் மீண்டும் அரியணையில் ஏறினார்.

ஐக்கிய ஜனதா தளத்தை பொறுத்தவரை போதிய பிரதிநிதித்துவம் தரப்படாததால் பாஜக-வுடன் இணங்கவில்லை. எனினும் அதிமுக சார்பில் தமிழகத்தில் இருந்து போட்டியிட்ட ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார். அதுவும் முழுக்க முழுக்க அதிமுகவின் வெற்றிதான். எனவே தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜக ஒரு தொகுதியில் கூட நேரடியாக வெற்றி பெறாத நிலையில், ஏற்கனவே மாநிலங்களவையில் 13 அதிமுக உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மத்திய அரசான பாஜகவுக்கு இது மிகவும் முக்கியமாக இருக்கும் பட்சத்தில், அதிமுகவிலிருந்து எவரையும் மத்திய அமைச்சரவையில் சேர்க்காமல் இருந்ததற்கான காரணம் தெரியவில்லை என்று கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார். சரி மத்திய அமைச்சரவை அதிமுக உறுப்பினர்களைத்தான் புறக்கணித்தது என்றால் பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் மற்றும் தமிழிசை சௌந்தராஜன் உள்ளிட்ட எந்த தமிழ் பாஜக நிர்வாகிகளும் மாநிலங்களவை உறுப்பினராகவும் மத்திய அமைச்சரவையிலும் இடம்பெறவில்லை  என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் பேசியவர்,  கேரள மாநிலத்திற்கு பிரதிநிதித்துவம் வழங்கும் நோக்கில் வி.முரளிதரன் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு அமைச்சராகும் வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த வாய்ப்பு தமிழகத்திலிருந்து எவருக்கும் வழங்கப்படவில்லை. மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்றிருக்கின்ற நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோரை பொறுத்தவரை, இவர்கள் தமிழர்கள் என்று கூறினாலும் இவர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லாமல் இருப்பதால் இவர்களை தமிழக பிரதிநிதிகளாகக் கருத முடியாது என்று விமர்சித்தவர், இதற்கெல்லாம்  என்ன உள்காரணம் என்று கேள்வி எழுப்பியதோடு, இதற்கு முழு பொறுப்பும் பிரதமர் நரேந்திர மோடிதான் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

BJP, NARENDRAMODI, TNPOLITICS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்