'இப்படி ஒரு கணவன் மனைவியா'...'அவர் கேட்டாரு நான் நகையை கழற்றி கொடுத்தேன்'... தனது கஷ்டத்திலும் இப்படி ஒரு முடிவை எடுத்த ஆட்டோ டிரைவர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தனக்குக் கஷ்டம் இருக்கும் போதும் அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என நினைக்கும் உள்ளத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இந்தியாவில் கொரோனா ஏற்படுத்திய பாதிப்பே பெரிய அளவில் உள்ள நிலையில், அதன் இரண்டாவது அலை சூறாவளியைப் போலத் தாண்டவம் ஆடி வருகிறது. கடந்த வருடம் அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் காரணமாகப் பலர் வேலையிழந்த நிலையில் பொருளாதாரம் அடியோடு முடங்கிப் போனது. குறிப்பாகத் தினசரி வருமானம் பெற்று வந்தோர் கடுமையான நெருக்கடிக்குத் தள்ளப்பட்டார்கள்.

ஆனால் தனக்குக் கஷ்டம் இருந்தாலும் அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என நினைத்த பல நல்ல உள்ளங்களை இந்த கொரோனா காலம் நமது கண்முன்னே காட்டியிருக்கிறது. அந்த வகையில் மத்தியப்பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஜாவத் கான். தினசரி ஆட்டோ ஓட்டி தனது குடும்பத்தின் தேவையை நிறைவு செய்து வரும் இவர், தினமும் ஆம்புலன்ஸ் பற்றாக்குறையால் மருத்துவமனைகளுக்குச் செல்ல மக்கள் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பதை சமூக ஊடகங்களிலும், செய்தி சேனல்களிலும் பார்த்துள்ளார்.

இதனால் மிகவும் வேதனைப்பட்ட ஜாவத், அவர்களுக்கு என்னால் முடிந்ததை ஏதாவது செய்ய வேண்டும் என முடிவு செய்துள்ளார். அதன்படி தனது ஆட்டோவை ஆம்புலன்சாக மாற்றி நோயாளிகளை இலவசமாக மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தார். தனது முடிவைத் தனது மனைவியிடம் சொல்ல, அவர் சிறிதும் யோசிக்காமல் தனது நகைகளைக் கழற்றி கொடுத்து தனது பங்கையும் ஆற்றியுள்ளார்.

தற்போது வரை ஒன்பதுக்கும் மேற்பட்ட நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ள ஜாவத், தனது ஆட்டோவில் ஆக்சிஜன் வசதியையும் இணைத்துள்ளார். ''எனது தொடர்பு எண் சமூக ஊடகங்களில் கிடைக்கிறது. ஆம்புலன்ஸ் இல்லாவிட்டால் எந்த நேரத்திலும்  மக்கள் என்னை அழைக்கலாம்'' எனக் கூறியுள்ளார் ஜாவத்.

ஒரு பக்கம் கொரோனா மக்களைப் பாடாய்ப் படுத்தி வந்தாலும், எந்த நிலையிலும் மக்களுக்கு உதவி செய்பவர்கள் தேவ தூதர்களாக வந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்