எங்களை அவர் ‘ஏமாத்திட்டாரு’.. ‘பாபா கா தாபா’ கடையை வீடியோ எடுத்த ‘YouTuber’ மீது போலீஸில் பரபரப்பு புகார்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சமீபத்தில் வைரலான பாபா கா தாபா உணவக உரிமையாளர் காந்தா பிரசாத், தன்னை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்ட யூடியூபர் வாசன் மீது போலீசில் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

டெல்லி மால்வியா நகரில் பாபா கா தாபா (Baba Ka Dhaba) என்ற பெயரில் உணவகம் நடத்தி வருபவர் காந்தா பிரசாத். இவர் தொடர்பான வீடியோ கடந்த அக்டோபர் மாதம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த வீடியோவை யூடியூப் சேனல் நடத்தி வரும் கவுரவ் வாசன் என்பவர் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார்.

கொரோனா ஊரடங்கால் தனது தொழில் முடங்கியதாகவும், வாடிக்கையாளர்கள் குறைந்ததால் உணவகத்தை நடத்த சிரமப்படுவதாகவும் காந்தா பிரசாத் மற்றும் அவரது மனைவியும் கண்கலங்க கூறியிருந்தனர். அதனால் பொதுமக்கள் இந்த தம்பதிக்கு உதவி செய்யும்படி யூடியூபர் வாசன் கேட்டுக்கொண்டார். இதற்காக தனது வங்கிக் கணக்கு விவரங்களை வாசன் தன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

இந்த வீடியோவை சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர் அஸ்வின் உட்பட பலரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். இதனால் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவ ஆரம்பித்தது. இதனை அடுத்து வாசனின் வங்கிக்கணக்கில் பொதுமக்கள் பலரும் பணம் அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் தனது பெயரை பயன்படுத்தி திரட்டப்பட்ட நிதியை யூடியூபர் கவுரவ் வாசன் முறைகேடாக பயன்படுத்தியதாக மால்வியா நகர காவல் நிலையத்தில் காந்தா பிரசாத் புகார் அளித்துள்ளார். ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை வாசன் மறுத்துள்ளார். பாபாவை (பிரசாத்) பொதுமக்கள் தொந்தரவு செய்வதை நான் விரும்பவில்லை. அதனால்தான் எனது வங்கி விவரங்களை பகிர்ந்து நிதி திரட்டினேன் என்று வாசன் கூறி உள்ளார்.

மேலும் இதுதொடர்பாக தெரிவித்த யூடியூபர் வாசன், ‘அந்த வயதான தம்பதியரின் கஷ்டத்தை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டேன். ஆனால் வீடியோ வைரலாகும் என நினைக்கவில்லை. மக்கள் அந்த தம்பதிக்கு உதவ முன்வந்தனர். அதனால் எனது வங்கி கணக்கை பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் நிதியுதவி வந்ததாக வங்கி கணக்கு விவரங்களை வாசன் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதில் 1 லட்சம் ரூபாய் மற்றும் 2 லட்சத்து 33 ஆயிரத்துக்கான காசோலைகள், 45 ஆயிரம் ரூபாய் பணமாக வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 3 நாள்களில் இவ்வளவு பணம்தான் வந்ததாக வாசன் கூறியுள்ளார். ஆனால் சில யூடியூபர்கள் 20 முதல் 25 லட்சம் வரை நிதியுதவி வந்திருக்க வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளனர். இதனை வாசன் மறுத்துள்ளார்.

இதுகுறித்து தெரிவித்த டிசிபி அட்துல் குமார் தாகூர், ‘அந்த வயதான தம்பதியினர் கொடுத்த புகாரை நாங்களை பெற்றுக்கொண்டுள்ளோம். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது’ என தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் பேசிய பாபா கா தாபா உணவக உரிமையாளர் காந்தா பிரசாத், சமூக வலைதளத்தில் வீடியோ வெளியாகி பேமஸ் ஆனாலும், கடைக்கு சாப்பிட மக்கள் குறைவாகவே வருவதாகவும், பலரும் செல்ஃபி எடுக்கதான் வருகின்றனர் என காந்தா பிரசாத் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்