'அவர் சொன்னா, என் புத்தி எங்க போச்சு'... '5 லட்ச ரூபாய் போட்டு புதுசா ஹோட்டல்'... 'பாபா கா தாபாவை ஞாபகம் இருக்கா'... அவர்களின் தற்போதைய நிலை!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பாபா கா தாபா என்ற பெயரில் சிறு உணவகம் நடத்திவந்த காந்தா பிரசாத் ஊரடங்கு காரணமாகத் தனது தொழில் முடங்கிவிட்டது என கண்ணீர் மல்கக் கூறும் வீடியோ கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சமூகவலைத்தளத்தில் வைரலானது.

இந்த கொரோனா காலகட்டம் பல மனிதர்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு விட்டது என்றே சொல்லலாம். அந்த வகையில் டெல்லியின் மால்வியா நகரில் பாபா கா தாபா என்ற பெயரில் சிறு உணவகம் நடத்தி வந்தவர் காந்தா பிரசாத். 80 வயதான இவர் தனது மனைவியுடன் இந்த சிறிய உணவகத்தை நடத்தி வந்த நிலையில், கொரோனா பொது முடக்கம் காரணமாக இவரது வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் தனது உணவகத்திற்கு யாரும் வரவில்லை எனவும் வருமானம் இல்லை எனவும் கண்ணீர் மல்கக் காந்தா பிரசாத் பேசிய வீடியோ  கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சமூகவலைத்தளத்தில் நாடு முழுவதும் வைரலானது. இதனை யூடியூப் சேனல் நடத்தி வந்த கவுரவ் வாசன் என்பவர் எடுத்து தனது யூடியூப் சேனலில் பதிவிட்டிருந்தார்.

அந்த வீடியோ வைரலானதையடுத்து ஆயிரக்கணக்கானோர் பாபா கா தாபா உரிமையாளர் காந்தா பிரசாத்திற்கு உதவ முன்வந்தனர். ஆயிரக்கணக்கானோர் அவருக்கு நிதியுதவியும் வழங்கினர். மேலும், மால்வியா நகரில் வசித்துவந்தவர்களில் பலரும் பாபா கா தாபா கடைக்குச் சென்று உணவருந்திக் கடை வியாபாரத்தை அதிகரிக்கச்செய்தனர். பலர் வழங்கிய உதவியால் காந்தா பிரசாத்தின் வருமானம் உயர்ந்து நிதி நிலை அதிகரித்தது.

இந்த சூழ்நிலையில் தனது பெயரைப் பயன்படுத்தித் திரட்டப்பட்ட நிதியை யூடியூப் சேனல் உரிமையாளர் கவுரவ் வாசன் முறைகேடாகப் பயன்படுத்தியதாக உதவி செய்த யூடியூப் சேனல் மீதே காந்தா பிரசாத் போலீசில் புகாரும் அளித்தார். அந்த விவகாரமும் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தது.

இதனைத் தொடர்ந்து, விற்பனை அதிகரித்தல், பொதுமக்களில் பலர் வழங்கிய நிதி ஆகியவற்றால் வருமானம் உயர்ந்ததையடுத்து பாபா கா தாபா என்ற பெயரில் சிறு உணவகம் வைத்திருந்த காந்தா பிரசாத் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5 லட்ச ரூபாய் முதலீட்டில் புதிய உயர்தர உணவகம் ஒன்றை அதே மால்வியா நகரில் திறந்தார். புதிய கடையைத் திறந்ததால் அவர் தனது பழைய உணவகத்தை மூடிவிட்டார்.

புதிதாகத் திறந்த உயர்தர உணவகத்தில் இந்திய மற்றும் சீன உணவுகளை அவர் வழங்கி வந்தார். 3 வேலையாட்கள் பணியமர்த்தப்பட்டனர். தொடக்கத்தில் மக்கள் அதிக அளவில் வந்த நிலையில் நாளடைவில் காந்த பிரசாத்வின் உயர்தர உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்தது. இதனால், வருமானம் குறைந்து தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது.

இந்நிலையில், போதிய வருமானம் இல்லாததால் தான் புதிதாகத் திறந்த உயர்தர உணவகத்தைப் பாபா கா தாபா உரிமையாளர் காந்த பிரசாத் மூடிவிட்டார். தற்போது அவர் தனது பழைய உணவக கடையான மால்வியா நகரில் அமைந்துள்ள பாபா கா தாபா சிறு உணவகத்திற்கே சென்றுவிட்டார். தனது பழைய உணவக கடையைத் திறந்து அவர் தற்போது தொழில் செய்து வருகிறார்.

இதுகுறித்து பேசிய காந்தா பிரசாத், புதிய கடையில் மாதாந்திர வருமானம் 40 ஆயிரம் ரூபாயைத் தாண்டவில்லை. அனைத்து நஷ்டங்களையும் நான் ஏற்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. புதிதாக உணவகத்தைத் திறக்க வேண்டும் எனச் சிலர் எனக்குத் தவறாக ஆலோசனை வழங்கிவிட்டதாக நான் நினைக்கிறேன்.

எங்களின் மொத்த முதலீடு 5 லட்ச ரூபாயில் உணவகத்தை மூடும்போது அதில் உள்ள நாற்காலி, பாத்திரங்கள், உணவு சமைக்கும் இயந்திரங்கள் ஆகியவற்றை விற்பனை செய்து 36 ஆயிரம் ரூபாயை மட்டுமே எங்களால் மீட்கமுடிந்தது’ என சோகத்துடன் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்