ஜடேஜா சூப்பரா விளையாடுறாரு.. அதனால்தான் எனக்கு ‘டீம்ல’ இடம் கிடைக்கல.. இந்திய அணியின் இளம் வீரர் ஆதங்கம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஜடேஜா சிறப்பாக விளையாடி வருவதால் அணியில் இடம் கிடைப்பது சிரமமாக இருப்பதாக அக்சர் படேல் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் இளம் இடதுகை சுழற்பந்து வீச்சாளரான அக்சர் படேல், கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேபோல் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் சார்பாக விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் The Indian Express பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் ஜடேஜா குறித்து அக்சர் படேல் பேசியுள்ளார். அதில், ‘என்னுடைய திறமை மீது நம்பிக்கை இல்லாமல் இல்லை. ஒருநாள் போட்டிகளில் காயம் காரணமாக இந்திய அணில் இடம் கிடைக்காமல் போனது. டெஸ்ட் போட்டிகளில் அஸ்வினும், ஜடேஜாவும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதுவும் சமீப காலமாக ஜடேஜா மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதனால் இன்னொரு இடதுகை சுழற்பந்துவீச்சாளருக்கு அணியில் இடம் கிடைப்பது சிரமமாக உள்ளது.

இந்திய டெஸ்ட் அணிக்காக குல்தீப் யாதவ் மற்றும் சஹால் ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடினர். அணியில் சில நேரம் காம்பினேஷன்கள் மாற்றப்படுவதால், நமக்கான வாய்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போது அதை நிரூபிக்கும் வகையில் விளையாடுவேன். அப்படிதான் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் எனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி விளையாடினேன்.

நானும் ஜடேஜாவும் நல்ல நண்பர்கள். நாங்கள் இருவரும் சிஎஸ்கே அணியில் ஒன்றாக விளையாடி இருக்கிறோம். ஜடேஜா இருக்கும் இடம் மிகவும் கலகலப்பாக இருக்கும். டெஸ்ட் போட்டிகளில் சில நேரங்களில் எதிரணி பேட்ஸ்மேன்கள் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடிக்கொண்டு இருப்பார்கள். அப்போது நம் வீரர்களை சோர்வின்றி வைத்துக்கொள்ள ஜடேஜா நகைச்சுவைகள் கூறுவார். இதனால் ஒட்டுமொத்த அணியும் உற்சாகமாக இருக்கும்’ என அக்சர் படேல் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்