‘நாங்க பண்ண தப்பே அவரோட கடைசி ஓவரை கொடுக்காததுதான்’!.. தோல்விக்குபின் ரிக்கி பாண்டிங் சொன்ன ‘முக்கிய’ காரணம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முன்னணி வீரரின் கடைசி ஓவரை கொடுக்காதது தவறு என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 7-வது போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை எடுத்தது.

இதில் அதிகபட்சமாக கேப்டன் ரிஷப் பந்த் 51 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரை உனட்கட் 3 விக்கெட்டுகளும், முஸ்தாபிசூர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளும், கிறிஸ் மோர்ஸ் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனை அடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி விளையாடியது. இதில் தொடக்க ஆட்டக்காரர்ளாக களமிறங்கிய ஜோஸ் பட்லர் 2 ரன்னிலும், மனன் வோஹ்ராக் 9 ரன்னிலும் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர். இதனை அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாமன் (4 ரன்கள்), சிவம் தூபே (2) என அடுத்தடுத்து அவுட்டாகினர். இதனால் 42 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை ராஜஸ்தான் அணி இழந்தது.

இந்த நிலையில் ஜோடி சேர்ந்த டேவிட் மில்லர் மற்றும் ராகுல் திவேட்டியா கூட்டணி நிதானமாக ஆடி ஸ்கோரை உயர்த்தியது. இதில் 15-வது ஓவரில் ராகுல் திவேட்டியா (19 ரன்கள்) அவுட்டாக, அதற்கு அடுத்த ஓவரில் டேவிட் மில்லரும் (62 ரன்கள்) அவுட்டாகினார். இதனால் 18 பந்துகளில் 34 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் ராஜஸ்தான் அணி இருந்தது.

இந்த சமயத்தில் ஜோடி சேர்ந்த கிறிஸ் மோரிஸ்-உனட்கட் கூட்டணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் 19.4 ஓவர்களில் 150 ரன்கள் அடித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. இதில் கிறிஸ் மோரிஸ் 18 பந்துகளில் 36 ரன்கள் அடித்து அசத்தினார்.

இந்த நிலையில் போட்டி முடிந்தபின் தோல்வி குறித்து பேசிய டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், ‘நிச்சமாக, டீம் மீட்டிங்கில் இதை பற்றி பேசுவோம். அஸ்வின் அருமையாக பந்து வீசினார். 3 ஓவர்களை வீசியுள்ள அவர் 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார். குறிப்பாக ஒரு பவுண்டரி கூட செல்லவில்லை. முதல் போட்டியில் அவர் சரியாக விளையாடவில்லை. ஆனால், கடந்த சில நாட்களாக அவர் கடுமையாக பயிற்சி மேற்கொண்டார்.

இன்றைய போட்டியில் அவர் சிறப்பாக பந்து வீசினார். அவருடைய கடைசி ஓவரை கொடுக்காதது நாங்கள் செய்த தவறு. இதைப் பற்றி அணி வீரர்களுடன் கண்டிப்பாக பேசுவோம்’ என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

இப்போட்டியின் கடைசி ஓவரை டாம் கர்ரன் வீசினார். அப்போது 6 பந்துகளில் 12 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் ராஜஸ்தான் அணி இருந்தது. அந்த ஓவரின் முதல் பந்தில் 2 ரன்கள் செல்ல, அடுத்த பந்தில் சிக்ஸர் விளாசி கிறிஸ் மோரிஸ் அதிர்ச்சி கொடுத்தார். இதனை அடுத்து 4-வது பந்தில் கிறிஸ் மோரிஸ் மற்றொரு சிக்ஸர் விளாச, ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் 3.4 ஓவர்களை வீசியுள்ள டாம் கர்ரன் 35 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்