'இந்த கோலத்துலயா உன்ன பாக்கணும்'... 'மகனுக்காக ஆசையா கொண்டு வந்த பர்கர்'... தந்தையை பார்த்ததும் கதறிய ஆர்யன்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆர்யன் கான் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீது நீதிமன்றம் இன்று விசாரணை நடத்துகிறது.

கடந்த 2-ம் தேதி மும்பையிலிருந்து கோவாவுக்குச் சுற்றுலா புறப்பட்ட கார்டிலியா சொகுசுக் கப்பலில் கேளிக்கை விருந்து நடைபெற்றது. இதில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் பயன்படுத்தப்படுவதாக, போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சாதாரண உடையில் அந்த கப்பலைத் தீவிரமாகக் கண்காணித்தார்கள்.

அப்போது நடந்த அதிரடி சோதனையில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு (என்சிபி) அதிகாரிகள் கைது செய்தனர். இவர்களை 3 நாள் என்சிபி காவலில் விசாரிக்க நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை அனுமதி வழங்கியது. என்சிபி காவல் முடிவுக்கு வந்ததால் இவர்கள் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரையும் வரும் திங்கட்கிழமை வரை தங்கள் காவலில் விசாரிக்க என்சிபி அனுமதி கோரியது. இதற்கு ஆர்யன்கான் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனிடையே ஷாருக் மனைவி கௌரி கான், ஆர்யன் கானை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது மகனுக்கு மிகவும் பிடித்த பர்கரை கொண்டு சென்றதாகவும், ஆனால் அதனை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும் நடிகர் ஷாருக்கான் தனது மகனைச் சந்திக்க அதிகாரிகளிடம் அனுமதி கேட்டுச் சென்ற போது ஆர்யன் தந்தையைப் பார்த்து அழுததாகவும், பின்பு தைரியமாக இரு என ஆறுதல் வார்த்தைகளைக் கூறிவிட்டு ஷாருக்கான் சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக பாலிவூட் பிரபலங்கள் பலரும் ஷாருக்கானுக்கு ஆறுதல் கூறி வரும் நிலையில், ஷாருக் அதனை விரும்பாமல் தன்னை யாரும் சந்திக்க வர வேண்டாம் எனக் கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே ஆர்யன் சார்பில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்