'Sorry, கோவிஷீல்டு போட்டாலும்'... 'விசா எடுத்து, பிளைட் ஏறிவந்த இந்தியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நாடு'... திருப்பி பதிலடி கொடுத்த இந்தியா!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அதென்ன இந்தியர்களுக்கு மட்டும் இந்த ஓரவஞ்சனை என்பது தான் பலரின் கேள்வியாக உள்ளது.

உலகளவில் கொரோனா பரவல் சற்று தணிந்து வரும் நிலையில், பல நாடுகளும் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுதல், கொரோனா வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றுதலை மிகவும் கடுமையாக கடைப்பிடித்து வருகிறது. இந்நிலையில் வெளிநாடுகளிலிருந்து தங்கள் நாட்டிற்கு வருபவர்களுக்கான பயண கட்டுப்பாடுகளை இங்கிலாந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் தளர்த்தியது.

ஆனால் இந்தியாவிலிருந்து இங்கிலாந்து வருபவர்களுக்கான கட்டுப்பாடுகள் தொடரும் என அதிரடியாக அறிவித்து பெரும் அதிர்ச்சி கொடுத்தது. இதில் தடுப்பூசி போட்டவர்களுக்கும் இதே நிலைமை என்பது தான் அதிர்ச்சியின் உச்சம். இங்கிலாந்தில் தற்போது உள்ள நடைமுறைகளின்படி இந்தியாவிலிருந்து இங்கிலாந்து வரும் இந்தியர்கள் விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டால் அவர்கள் சிகிச்சைக்குச் செல்ல வேண்டும். கொரோனா நெகட்டிவ் என முடிவு வந்தால் இந்தியப் பயணிகள் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். அதன் பின்னர் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். ஆனால் வரும் திங்கட்கிழமை முதல் புதிய கட்டுப்பாடுகளை இங்கிலாந்து விதித்துள்ளது.

அதன்படி இங்கிலாந்து வரும் இந்தியர்கள் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக்கொண்டபோதும் 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது. அதாவது இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்டாலும், இங்கிலாந்து வரும் இந்தியர்கள் தடுப்பூசி போடாதவர்கள் என்றே கருதப்படுவார்கள்.

இது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில், இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசியில் எந்த சிக்கலும் இல்லை என்ற இங்கிலாந்து, தடுப்பூசி சான்றிதழில் தான் பிரச்சினை என்று கூறியது. ஆனால் இது தொடர்பாக எந்த வித முடிவும் இது வரை எட்டப்படவில்லை. இதனால் இந்தியாவிலிருந்து இங்கிலாந்து வரும் இந்தியர்கள் வரும் திங்கட்கிழமை முதல் 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளார்கள்.

இதையடுத்து இங்கிலாந்து அரசின் நடவடிக்கைக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. அதன்படி, வரும் திங்கட்கிழமை முதல் இங்கிலாந்திலிருந்து இந்தியா வரும் இங்கிலாந்து நாட்டினர் அனைவரும் 10 நாட்கள் கட்டாயமாகத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் தனிமைப்படுத்துதல் என்பது கட்டாயம்.

கொரோனா தடுப்பூசி போட்டிருந்தாலும் இந்தியா வரும் இங்கிலாந்து நாட்டினர் பயணம் மேற்கொள்வதற்கு 72 மணிநேரத்திற்குள் கொரோனா பரிசோதனை செய்து ‘நெகட்டிவ்’ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும், இந்தியா வந்த உடன் இங்கிலாந்து பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும். மேலும், 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் போது 8-வது நாளில் 2-வது முறையாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்