கிறிஸ்துமஸ் செலவுக்கு பணம் எடுக்க போனவருக்கு காத்திருந்த ‘இன்ப அதிர்ச்சி’.. மக்கள் கொடுத்த ‘சர்ப்ரைஸ்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளாவில் 28 ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாஸ்திரி கொலை வழக்கில் சாட்சி சொன்ன முன்னாள் திருடருக்கு மக்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி அபயா என்ற கல்லூரி மாணவி, செயின் பயஸ் கான்வென்டில் தங்கி படித்து வந்தார். கடந்த 1992-ம் ஆண்டு கான்வென்ட் வளாகத்தில் உள்ள கிணறு ஒன்றில் மர்மமான முறையில் அபயா இறந்து கிடந்தார். 19 வயதே ஆன கன்னியாஸ்திரி மர்மமாக இறந்தது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து அபயாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, மனித உரிமை ஆர்வலர் ஜோமோன் என்பவர் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சிபிஐ விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. அதில், பாதியார்கள் தாமஸ் கோட்டூர், ஜோஸ் புத்ருக்கயில் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகியோர் தகாத உறவில் ஈடுபட்டிருந்ததை, சமயலறைக்கு தண்ணீர் குடிக்க வந்த அபயா பார்த்துள்ளார்.

இந்த விஷயம் வெளியே தெரிந்தால் தங்களது மானம் போய்விடும் என்ற பயத்தில் அபயாவை கொலை செய்து கிணற்றில் வீசியுள்ளதாக சிபிஐ விசாரணையில் வெளிவந்தது. மேலும் தான் கன்னித்தன்மையுடன் இருப்பதாக காட்டிக் கொள்வதற்கு கன்னியாஸ்திரி செபி அறுவை சிகிச்சை செய்திருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.

பல வருடங்களாக நடைபெற்ற இந்த வழக்கில் பாதிரியார் ஜோஸ் புத்ருக்கயில் மட்டும் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டார். கடந்த 28 ஆண்டுகளாக நடந்த வழக்கு விசாரணையில் 177 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன. அதில் முன்னாள் திருடர் அடக்கா ராஜூ என்பவர் அளித்த சாட்சி இந்த வழக்கில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

சம்பவத்தன்று அடக்கா ராஜூ அலுமினியங்களை திருட அங்கே சென்றுள்ளார். அப்போது பாதிரியர் மற்றும் கன்னியாஸ்திரி ஒரு பெண்ணை தூக்கிச் செல்வதை அவர் பார்த்துள்ளார். இதனால் சாட்சியை மாற்றி கூற அவருக்கு கோடிக்கணக்கில் பேரம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் எதற்கும் மயங்காத அடக்கா ராஜூ சிபிஐ நீதிமன்றத்தில் தான் பார்த்த சம்பவங்களை அப்படியே தெரிவித்தார். இதனை அடுத்து பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபிக்கு சிபிஐ நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

பணம், மிரட்டல் என எதற்கும் தனது மனதை மாற்றாமல் சாட்சி அளித்த முன்னாள் திருடர் அடக்கா ராஜூக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்தன. மேலும், தனது தந்தை திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது பிடிக்காமல் பிரிந்து சென்ற அடக்கா ராஜூவின் மகள்கள் மீண்டும் அவரோடு சேர்ந்தனர்.

இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை செலவுக்காக வங்கியில் பணம் எடுப்பதற்கு அடக்கா ராஜூ சென்றுள்ளார். அப்போது தனது வங்கி கணக்கில் சுமார் 15 லட்ச ரூபாய் இருப்பதைக் கண்டு இன்ப அதிர்ச்சியில் உறைந்துள்ளார். பின்னர் இதுகுறித்து விசாரிக்கையில், அலக்கா ராஜூவின் நேர்மையையும், மன உறுதியை பாராட்டி மக்கள் பலரும் அவரது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பி இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தெரிவித்த அலக்கா ராஜூ, ‘பணம் பெரிய விஷயம் இல்லை. என் மகளை போன்ற அந்த பெண்ணுக்கு நீதி கிடைத்துள்ளது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதுதான் எனக்கு உண்மையான மகிழ்ச்சி’ என நெகிழ்ச்சியுடன் அவர் தெரிவித்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்