'கணவருக்காக கதறிய பெண்'... 'நான் வாழ்க்கையை வாழ்ந்து முடிச்சிட்டேன்'... '85 வயது முதியவர் செய்த நெகிழ்ச்சி செயல்'... ஆனா 3 நாளில் நடந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தனக்கு ஒரு தேவை இருந்தும், அதைப் பற்றிக் கவலைப்படாமல் 85 வயது முதியவர் செய்த உதவி பலரையும் நெகிழச் செய்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை படு வேகமாகப் பரவி வருகிறது. இந்த இரண்டாம் பரவல் கொரோனா அலை இளம் வயதினரை அதிகமாக தாக்கி வருகிறது. இதனால் ஏராளமான இளம் வயதினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே மகாராஷ்டிரா மாநிலத்தில் நாக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 85 வயது மதிக்கத்தக்க, நாராயண் பவுராவ் தபட்கர் என்ற முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரின் ஆக்ஸிஜன் அளவு 60 ஆகக் குறைந்துவிட்டது. இருப்பினும் மருத்துவமனையில் அவரை அனுமதிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. பின்னர், அவரது மருமகன் மற்றும் மகளின் பெரும் போராட்டத்திற்குப் பிறகு அவர் இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இருப்பினும் பலகட்ட முயற்சிக்குப் பின்னர் தான் நாராயண் பவுராவ் தபட்கருக்கு மருத்துவமனையில் ஒரு படுக்கை இடம் கிடைத்தது. அவர் மருத்துவமனையிலிருந்த நேரத்தில் பெண் ஒருவர் அழுதுகொண்டே தனது கணவரை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கும் கொரோனா தாக்கியிருந்தது. ஆனால் மருத்துவமனையில் படுக்கை தட்டுப்பாடு நிலவியதால், அவருக்குப் படுக்கை கிடைக்கவில்லை.

இதனால், அந்தப் பெண் தன் கணவருக்கு ஒரு படுக்கையைத் தேடிக்கொண்டிருந்துள்ளார். இதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த நாராயண் பவுராவ், தனது படுக்கையை அந்த பெண்ணின் கணவருக்கு கொடுக்க முடிவு செய்துள்ளார். ஆனால் உங்களுக்கே கஷ்டப்பட்டுத் தான் படுக்கை கிடைத்து. அதைக் கொடுத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என குடும்பத்தினர் கேட்டுள்ளனர்.

அதற்கு நாராயண் பவுராவ், ''நான் 85 வயதைத் தாண்டிவிட்டேன். அதோடு வாழ்க்கையில் எல்லாவற்றையும் பார்த்து, வாழ்க்கையை வாழ்ந்து முடித்து விட்டேன். ஆனால் அந்த மனிதனுக்குப் பின்னால் ஒரு முழு குடும்பமும் இருக்கிறது. அந்த நபரின் குழந்தைகளுக்கு அவர்களின் தந்தை தேவை. அவருக்கு ஏதாவது நடந்தால் மொத்த குடும்பமும் நிர்க்கதியாகி விடும்'' எனக் கூறி நாராயண் பவுராவ் தனது படுக்கையை அந்த பெண்ணின் கணவருக்கு விட்டுக் கொடுத்துள்ளார்.

இதன் பின்னர் நாராயண் பவுராவ் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்குத் தனது சிகிச்சையை எடுத்து வந்துள்ளார். ஆனால் வீட்டிற்குச் சென்று மூன்று நாட்களுக்குள் அவர் உயிரிழந்தார். தனக்கு ஒரு தேவை இருந்தாலும், அதிலும் தான் ஆபத்தில் இருப்பதை அறிந்தும் முதியவர்  நாராயண் பவுராவ் செய்த உதவி பலரையும் கலங்க செய்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்