‘5 ஸ்டார் ஓட்டலில் வேலை’.. ‘கைநிறைய சம்பளம்’.. நொடியில் ‘தலைகீழாக’ மாறிய வாழ்க்கை.. துவண்டு போகாமல் சாதித்து காட்டிய இளைஞர்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா ஊரடங்கில் வேலையை இழந்த 5 ஸ்டார் ஓட்டலின் தலைமை சமையல்காரர், தற்போது சாலையோரத்தில் பிரியாணி கடையை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

மும்பையைச் சேர்ந்தவர் அக் ஷய் பார்க்கர். இவர் அங்குள்ள பிரபல 5 ஸ்டார் ஓட்டல் ஒன்றில் தலைமை சமையல்காரராக பணிபுரிந்து, மாதந்தோறும் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கி வந்தார். இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அவர் பணிபுரிந்து வந்த நட்சத்திர ஓட்டல் கடும் நஷ்டத்தை சந்தித்தது. வருமானமும் இல்லாததால் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் ஹோட்டல் நிர்வாகம் திண்டாடியது. ஒரு கட்டத்தில் நஷ்டத்தை தாக்கு பிடிக்க முடியாமல், தங்களிடம் பணிபுரியும் பல ஊழியர்களை கடந்த மே மாதம் வேலையை விட்டு நிறுத்தியது.

இதில் அக் ஷய் பார்க்கரும் ஒருவர். வேலை பறிபோன அதிர்ச்சி ஒருபுறம், இனி குடும்பத்தை எப்படி நடத்த போகிறோம் என்ற கவலை மறுபுறம் என அக் ஷய் பார்க்கர் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால் ஸ்டார் ஓட்டல் முதல் சாதாரண ஓட்டல் வரை அனைத்து இடங்களிலும் வேலைக்கு விண்ணப்பித்துள்ளார். ஆனால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

இந்த சமயத்தில்தான் அக் ஷய் பார்க்கருக்கு ஒரு யோசனை தோன்றியுள்ளது. சமையல் எனும் கைத்தொழில் இருக்கும் போது நாம் ஏன் மற்றவர்களிடத்தில் வேலை கேட்டு அலைய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற துணிச்சலுடன், உடனே தன்னிடம் இருந்த மிக சொற்ப அளவிலான பணத்தை வைத்து, மும்பையின் தாதர் பகுதியில் ஒரு சிறிய பிரியாணி கடையை அக் ஷய் பார்க்கர் தொடங்கினார். கடைக்கு ‘அக் ஷய் பார்க்கர் ஹவுஸ்’ என்று பெயர் சூட்டினார்.

ஆரம்பத்தில் மிக சுமாராகவே வியாபாரம் நடந்துள்ளது. நாட்கள் செல்ல செல்ல, இது ஸ்டார் ஓட்டல் தரத்திலான பிரியாணி என்பதை மக்கள் தெரிந்து கொண்டனர். அதன் பிறகு வாடிக்கையாளர்களின் கூட்டம் அக் ஷர் பார்க்கரின் கடையில் நிரம்பி வழிய தொடங்கியுள்ளது. இதனால் தற்போது நாளொன்றுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை சம்பாதிப்பதாக அக் ஷய் பார்க்கர் தெரிவித்துள்ளார். அக் ஷய் பார்க்கரின் இந்த வெற்றி கதை, தற்போது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்