'அவளோட பேச்சுல மயங்கிட்டேன்'... 'தனியாக சந்திக்க அழைத்ததும் எதுவும் யோசிக்காமல் சென்ற இளைஞர்'... வாழ்க்கையில் மறக்க முடியாத அளவுக்கு நடந்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

யார் என்ன என்ற விவரம் எதுவும் தெரியாமல், போனில் பேசி பழகிய பழக்கத்திற்காக இளம்பெண்ணை நேரில் சந்திக்கச் சென்ற இளைஞருக்கு நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொத்தமங்கலத்தைச் சேர்ந்தவர் ஆர்யா. இவர் மூவாற்றுப்புழா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் போனில் பேசி வந்துள்ளார். ஆரம்பத்தில் சாதாரணமாகப் பேசிய இருவரும் சில நாட்கள் சென்ற நிலையில் மிகவும் நெருக்கமாகப் பேசி வந்துள்ளார்கள். ஒரு கட்டத்தில் அந்த இளைஞர் ஆர்யாவின் பேச்சில் மயங்கிய நிலையில், உன்னை நேரில் சந்திக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். அதற்கு இளம்பெண் ஆர்யாவும் நாம் தனிமையில் சந்திக்கலாம் எனக் கூறி ஒரு சொகுசு ஹோட்டலுக்கு அழைத்துள்ளார்.

போனில் பேசிய பெண்ணை நேரில் பார்க்கப் போகிறோம் என்ற ஆர்வத்தில், அந்த இளைஞர் ஆர்யா சொன்ன ஹோட்டலுக்கு சென்றுள்ளார். ஹோட்டலில் அந்த இளைஞருக்காக ஆர்யா காத்திருந்த நிலையில், ஹோட்டல் அறைக்குள் அந்த இளைஞரை ஆர்யா அழைத்துள்ளார். அங்கு சென்றதும் அந்த இளைஞருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அறைக்குள் ஏற்கனவே 4 இளைஞர்கள் இருந்தார்கள்.

இதைப் பார்த்து ஒன்றும் புரியாமல் அந்த இளைஞர் நின்று கொண்டிருந்த நேரத்தில், ஆர்யா அந்த இளைஞரை வலுக்கட்டாயமாகத் துணிகளை அவிழ்க்க வைத்து, நிர்வாணமாக தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த அறைக்குள் 4 இளைஞர்கள் இருந்ததால் அந்த இளைஞரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பின்னர் புகைப்படங்களைக் காட்டி மிரட்டிய அந்த கும்பல், இந்த புகைப்படத்தை வெளியில் விட்டால் உன் நிலைமை என்னவாகும் என நினைத்துப் பார்.

நிர்வாணமாக ஒரு பெண்ணுடன் நீ இருப்பதாய் உனது குடும்பத்தினர் பார்த்தால் என்ன நடக்கும் என மிரட்டியுள்ளார்கள். இதனால் பயந்து போன அந்த இளைஞர் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டுள்ளார். அதற்கு அந்த கும்பல் நீ மூன்றரை லட்சம் கொடுத்தால் இந்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிடமாட்டோம் எனக் கூறியுள்ளார்கள். ஆனால் அந்த இளைஞர் அவ்வளவு பணம் இல்லை எனக் கூறியுள்ளார். 

பின்னர் அவரிடம் இருந்த மொபைல், ஏடிஎம் கார்டு போன்றவற்றைப் பறித்துக் கொண்டு இரவு முழுவதும் அந்த இளைஞரை ஒரு காரில் வைத்துக் கொண்டு சாலையில் சுற்றி வந்துள்ளார்கள். அதோடு அந்த இளைஞரின் ஏடிஎம் கார்டை  பயன்படுத்தி அதிலிருந்த 35,000 பணத்தையும் எடுத்துள்ளார்கள். ஒரு கட்டத்தில் எனக்குச் சிறுநீர் கழிக்க வேண்டும் என அந்த இளைஞர் கூறியுள்ளார். இதனால் காரை அந்த கும்பல் சாலையோரமாக நிறுத்திய நிலையில், வெளியில் இறங்கிய அந்த இளைஞர் காப்பாற்றுங்கள், எனச் சத்தம் போட்டுள்ளார்.

இதைச் சற்றும் எதிர்பாராத அந்த கும்பல் அந்த இளைஞரை காரின் உள்ளே இழுக்க முயற்சி செய்துள்ளார்கள். அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியிலிருந்த போலீசார், இளைஞரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து அந்த கும்பலை மடக்கிப் பிடித்தார்கள். இளம்பெண் ஆர்யா உட்பட யாசின், அஸ்வின், ஆசிப், ரிஷ்வான் ஆகிய 4 இளைஞர்களை போலீசார் கைது செய்த நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 4 பேரைத் தேடி வருகிறார்கள். இந்த கும்பல் இதுபோன்று வேறு ஏதேனும் சம்பத்தில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

எந்த பழக்கமும் இல்லாமல், மொபைலில் பேசி பழகியோ, சமூகவலைத்தளங்களில் பழகிய நபர்களை இதுபோன்று தனியாகச் சந்திக்கச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனக் கூறியுள்ள போலீசார், அந்த இளைஞருக்கு ஏற்பட்ட கதி வேறு யாருக்கும் ஏற்படாமல் இருக்க, நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்