ஆண்களை விட பெண்கள் கம்மியாதான் போன் யூஸ் பண்றாங்க.. என்ன காரணம்? ஆய்வில் வெளியான பரபரப்பு தகவல்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கிராம, சிறு நகர்ப் புறங்களைச் சேர்ந்த இளம்பெண்கள் 41 சதவிகிதம் பேர் ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக மட்டுமே செல்போன்களை பயன்படுத்துவதாக கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

டிஜிட்டல் அதிகாரமளித்தல் பவுண்டேஷன் சார்பில் இளம்பெண்கள் டிஜிட்டலை பயன்படுத்துவது தொடர்பாக அண்மையில் சர்வே ஒன்று எடுக்கப்பட்டது. 10 மாநிலங்களில் எடுக்கப்பட்ட சர்வேயில் இளம்பெண்கள் டிஜிட்டலை பயன்படுத்துவதற்கு எப்படிப்பட்ட சவால்களை எதிர்கொள்கிறார்கள், அது அவர்களின் கல்வியில் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.

இதில், பெரும்பாலான பெண்கள் சொந்தமாக செல்போன் பயன்படுத்துவதில் சிரமங்களை சந்தித்துள்ளனர். ஜார்க்கண்டைச் சேர்ந்த 17 வயது இளம்பெண் ஒருவர், ‘நீ ரொம்ப சின்னப் பொண்ணு, அதனால நீ போன் யூஸ் பண்ணக் கூடாது. உன்னோட சகோதரன்தான் போன்லாம் வச்சிருக்கலாம்’ என தனக்கு பலரும் அறிவுரை கூறுவதாகக் குறிப்பிட்டுள்ளார். பீகாரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், ‘ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதற்காக எங்களை திட்டுகிறார்கள், எங்களுக்கு போன் தேவையில்லை என அவர்களாகவே நினைத்துக்கொள்கிறார்கள்’ என கூறினார்.

இளம்பெண்கள் செல்போன் பயன்படுத்துவதால் கவனச் சிதறல் ஏற்படுவதாக 60 சதவிகித பெற்றோர்கள் கருத்து தெரிவித்தனர். செல்போன் பயன்படுத்துவதில் உள்ள பாலின ஏற்றத்தாழ்வுகளும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கர்நாடக மாநிலத்தில் 65 சதவிகித பெண்களும், குறைந்தபட்சமாக அசாமில் 3.3 சதவிகிதம் பேரும் செல்போன் பயன்படுத்துவதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

ஹரியானாவில் ஆண்கள் செல்போனை எளிதாக உபயோகப்படுத்தலாம், ஆனால் பெண்கள் அவ்வாறு உபயோகப்படுத்த முடியாது. மகாராஷ்டிராவில் 93 சதவிகிதம் ஆண்களும், 7 சதவிகித பெண்களும் மட்டுமே எளிமையாக செல்போன் பயன்படுத்த முடிகிறது. தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் சரிசமமாக செல்போன் பயன்படுத்துகின்றனர்.

கருத்துக் கணிப்பில் பங்கேற்ற பெண்களில் 97.2 சதவிகிதம் பேர் ஏதேனும் தகவல்களை தெரிந்துகொள்ள தங்களுக்கு செல்போன் தேவை முக்கியமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். இப்படி கூறியவர்களில் 71 சதவிகிதம் பேரிடம் சொந்தமாக செல்போன் இல்லை. ஏனென்றால் அவர்களது குடும்பத்தினரால் அதனை வாங்கித் தர முடியவில்லை என தெரியவந்துள்ளது. கிராம, சிறு நகரப் பகுதிகளில் இளம் பெண்கள், ஆசிரியர்கள், குடும்ப உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்பட 4,100 பேரிடம் இந்த கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்