'நைட் தூங்கும்போது ஒண்ணும் இல்லையே'... 'இரவோடு இரவாக என்ன சம்பவம் நடந்திருக்கு'... காலையில் கதவை திறந்ததும் அதிர்ந்துபோன வீட்டு ஓனர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இரவில் தூங்கப் போனபோது ஒன்றும் இல்லையே, ஆனால் இரவோடு இரவாக என்ன நடந்திருக்கும் என்பது தான் வீட்டில் உள்ளவரின் பெரும் சந்தேகமாக இருந்தது.

பெங்களூரு டேனரி ரோட்டில் உள்ள தெருவில் வசித்து வருபவர் ஜபி. இவருக்கு அந்த பகுதியில் சொந்த வீடு ஒன்று உள்ளது. ஆனால் அந்த வீட்டில் அவர் வசிக்காமல் வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு, வேறு பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜபி வீட்டின் முன்பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது.

என்ன நடக்கிறது என்பது புரியாமல் தவித்த ஜபி, பெரிய பள்ளம் ஏற்பட என்ன காரணம் என புரியாமல் தவித்துப் போனார். ஆனால் இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் நேற்று அதிகாலையில் மேலும் பல அடிக்குப் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தீயணைப்பு படைவீரர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டதில் ஜபி வீட்டின் முன்பு 30 அடிக்குப் பெரிய பள்ளம் ஏற்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது.

மேலும் கொட்டிகெரேயில் இருந்து நாகசந்திரா வரை மெட்ரோ ரெயில் பாதைக்காகச் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சுரங்கப் பாதை அமைக்கப்பட்டதால், டேனரி ரோடு, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகளில் உள்ள கிணறு, ஆழ்துளைக் கிணறு ஆகியவற்றை மூடும்படி மெட்ரோ ரெயில் நிர்வாகம் உத்தரவிட்டு இருந்தது. அந்த வகையில் ஜபி வீட்டிலிருந்த கிணற்றையும் மெட்ரோ அதிகாரிகள் மூடி விட்டுச் சென்றார்கள்.

தற்போது அந்த இடத்தில் தான் 30 அடிக்குப் பெரிய பள்ளம் ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இந்தச்சூழ்நிலையில் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்ததால் வீட்டில் அடிக்கடி அதிர்வு ஏற்பட்டு வந்ததாக ஜபி குற்றம் சாட்டியுள்ளார். இதற்கிடையே வீட்டின் முன்னர் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வீடு எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாக அச்சம் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அந்த வீட்டில் வசித்து வந்தவர்கள் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.

இதற்கிடையே அந்த வீட்டைப் பார்வையிட்ட அதிகாரிகள், அந்த பள்ளத்தில் கான்கிரீட் போட்டுக் கொடுத்து அந்த பகுதி மூடப்படும் எனவும் வீடு சேதமடைந்து இருந்தால் உரிமையாளருக்கு வீடு கட்டிக் கொடுக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்