“போட்டு வைத்த திட்டம் எல்லாம் ஓகே கண்மணி!”.. பகட்டாக சுற்றிவந்த ‘த்ரீ ரோசஸ்’ பெண்களை.. பிடித்து போலீஸில் ஒப்படைத்த இளைஞர்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

புதுக்கோட்டை, திருமயம் அருகே உள்ள விராச்சிலை கிராமத்தை சேர்ந்த 70 வயதான உமையாள் ஆச்சி என்பவர் கணவரை இழந்த நிலையில் விராச்சிலையில் தனியாக வசித்து வருகிறார்.

இவரது மகன்கள் வெளியூர்களில் வசித்து வரும் நிலையில், உமையாள் ஆச்சி வீட்டில் தனியாக இருந்தபோது, வீட்டுக்குள் புகுந்த 3 பெண்கள், உமையாள் ஆச்சியை கட்டிப்போட்டு 2 தங்க வளையல்கள், தோடுகள் உள்டப மொத்தம் 4 பவுன் நகைகள் மற்றும் ரூ.7 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். பின்னர் உமையாள் ஆச்சியின் வீடு திறந்து கிடந்திருந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது, அவர் கயிற்றால் கட்டப்பட்டு இருந்ததைக் கண்டதும், உடனடியாக அவரை மீட்டு நடந்த உண்மையை கேட்டறிந்தனர்.

இதனை அடுத்து அந்த பகுதியில் சுற்றித்திரிந்த சந்தேகத்துக்குரிய 3 பெண்களை, கிராம இளைஞர்கள் சிலர் பிடித்து விசாரித்தபோது, அந்த பெண்கள்தான் உமையாள்ஆச்சியை கட்டிப்போட்டு நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. பின்னர் அப்பெண்களை பிடித்து பனையப்பட்டி போலீஸ் நிலையத்தில் இளைஞர்கள் ஒப்படைத்தனர்.

அப்போதுதான் அந்த பெண்கள் சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டியை சேர்ந்த சுரேஷ் மனைவி கருப்பாயி (35), ஆவணிபட்டியை சேர்ந்த வீரப்பன் மனைவி தெய்வானை (40), திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த ஸ்ரீவித்யா (34) என்பது தெரியவந்தது. பின்னர் இன்ஸ்பெக்டர் பத்மா வழக்குப்பதிவு செய்து 3 பெண்களையும் கைது செய்ததுடன், உமையாள் ஆச்சியிடம் கொள்ளையடித்த நகை மற்றும் பணத்தை மீட்டார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்