'கொரோனா காலத்தில் கட்ட வேண்டிய 'EMIகான வட்டி'... 'ஆவலுடன் காத்திருந்த மாத சம்பளக்காரர்கள்'... சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

கொரோனா காலத்தில் வங்கிக் கடன்களுக்கான தவணையைச் செலுத்துவதில் மத்திய அரசு சலுகை அளித்து இருந்தது. அதோடு ஆகஸ்டு மாதம் வரை இஎம்யை செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது.

கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு மொத்த பொருளாதாரத்தையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டது என்றே சொல்லலாம். இதனால் மாத சம்பளக்காரர்கள், சிறு குறு தொழில் செய்வோர் எனப் பலரும் வெகுவாக பாதிக்கப்பட்டார்கள். பொருளாதார நெருக்கடியாலும், நிதிச்சுமையாலும் பல நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்குச் சம்பள குறைப்பு செய்ததோடு, பலர் வேலையை விட்டுக் கூட நீக்கப்பட்டார்கள்.

இந்த கொரோனா கால காலத்தில் பலருக்கு முறையான சம்பளம் இல்லாததால், வங்கிக் கடன்களுக்கான தவணையைச் செலுத்துவதில் மத்திய அரசு சலுகை அளித்து இருந்தது. ஆகஸ்டு மாதம் வரை இ.எம்.யை செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. தவணை செலுத்தாத காலத்தில் சில வங்கிகள் வட்டிக்கு வட்டி விதித்தன.

இதற்கிடையே கடன்களுக்கான தவணையை நீட்டிக்கக் கோரியும் கடன்களுக்கான வட்டியை முழுமையாகத் தள்ளுபடி செய்ய உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. ஊரடங்கில் தவணையைத் திருப்பி செலுத்தாத நபர்களுக்கு வங்கிகள் விதித்த வட்டிக்கு வட்டியை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டு இருந்தது.

இந்தநிலையில் இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கொரோனா காலகட்டத்தில் கடனுக்கான வட்டியை முழுமையாகத் தள்ளுபடி செய்ய உத்தரவிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. இதுதொடர்பாக நீதிபதிகள் அசோக்பூ‌ஷன், சுபாஷ்ரெட்டி, எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், ''கொரோனா கால வங்கிக் கடன் தவணை சலுகையை 6 மாதத்திற்கு மேல் நீட்டிக்க முடியாது.

இந்த காலகட்டத்தில் கடன்களுக்கான வட்டியை முழுமையாகத் தள்ளுபடி செய்ய உத்தரவு பிறப்பிக்க முடியாது. நாங்கள் பொருளாதார ஆய்வாளர்கள் அல்ல, இருக்கும் நிலைமையை பார்த்துத்தான் முடிவு செய்ய முடியும். மேலும் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி கொள்கையில் நாங்கள் தலையிட முடியாது. வங்கிக்கடன் தவணைகளைத் திருப்பி செலுத்துவதற்குக் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரிக்கிறோம்'' என நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்