‘ஊழியர்கள், அவங்க குடும்பத்தினருக்கும் இலவசம்’!.. ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்த ‘மெகா’ திட்டம்..!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

ரிலையன்ஸ் நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக மெகா திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பெரிய தடுப்பூசி திட்டத்தை நடைமுறைப்படுத்த இருக்கிறது. இதன்மூலம் 13 லட்சத்துக்கும் அதிகமான தங்களது ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர், கூட்டணி நிறுவனங்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. நாடு முழுவதும் 880 நகரங்களில் உள்ள இவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் விரிவான திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசி திட்டம் தற்போது பணியாற்றும் ஊழியர்களுக்கு மட்டுமால்லாமல், ரிலையன்ஸ் நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்ற ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. இதற்கு ஊழியர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் Cowin இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு RIL ஆன்லைன் ஹெல்த் கேர் தளமான Jio Healthhub-ல் தங்களது இடத்தை தெரிவு செய்து கொள்ளலாம்.

இந்தத் தடுப்பூசி திட்டம் மத்திய அரசின் பணியிட தடுப்பூசி திட்டக் கொள்கையின் ஓர் அங்கமாகும். இது RIL-ன் ஆக்குபேஷனல் ஹெல்த் செண்டர்களில் செலுத்தப்படும். அதாவது ஜாம்நகர், வதோதரா, ஹாசிரா, தாகேஜ், படல்கங்கா, நகோதானே, கானிகடா, கதிமோகா, சாஹ்தால், பராபங்கி, ஹோஸ்பியார்பூடில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனைகள் மற்றும் 800-க்கும் அதிகமான நகரங்களில் உள்ள கூட்டணி மருத்துவமனைகளான அப்போல்லோ, மாக்ஸ், போன்ற மருத்துவமனைகளிலும் தடுப்பூசிகள் போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் ஏற்கெனவே தடுப்பூசி போட்டுள்ளனர். இதற்காக இவர்கள் மேற்கொண்ட செலவுகளை நிறுவனம் திருப்பி அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 15-ம் தேதிக்குள் ரிலையன்ஸ் நிறுவனம் தங்களது அனைத்து ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்த திட்டமிட்டுள்ளது. ஆர்.ஐ.எல். மற்றும் அதன் குழுவைச் சேர்ந்த நிறுவனங்கள், ஜியோ ஸ்டோர்ஸ் மற்றும் 13,000 சில்லரை விற்பனை நிலைய ஊழியர்கள் ஆகியோரும் இந்த தடுப்பூசி திட்டத்தினால் பயனடையவுள்ளனர்.

இதற்காக கோவிஷீல்ட் (Covishield), கோவாக்சின் (Covaxin) தடுப்பூசிகளை ரிலையன்ஸ் வாங்கியுள்ளது. மும்பையில் உற்பத்தி தொழிற்கூடங்களில் ரிலையன்ஸ் மெகா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கியது. அடுத்த வாரத்தில் பிற பெரு நகரங்களிலும் மாநில தலைநகரங்களிலும் இந்த திட்டம் தொடங்கப்படும். இதற்கு அடுத்தபடியாக ரிலையன்ஸ் கூட்டணி நிறுவனங்களின் ஊழியர்கள் இருக்கும் பிற நகரங்களில் கூட்டணி மருத்துவமனைகளின் உதவியுடன் தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகத்திலேயே ஒரு நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு வழங்கும் தடுப்பூசி திட்டத்தில் இதுதான் பெரியது என சொல்லப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்