'சீனாவுக்கு தானே பிரச்சனைன்னு நினைக்காதீங்க'... '350 பில்லியன் டாலர் கடன்'... உலக நாடுகளை சுத்தலில் விட்ட நிறுவனம்!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

ஒரு காலத்தில் பல நிறுவனங்களை மிரளவைத்த நிறுவனம் இன்று திவாலாகும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

கடந்த 1996ஆம் ஆண்டு துவங்கப்பட்ட எவர்கிராண்டே நிறுவனம் சீனாவில் மெல்ல மெல்லத் தனது வியாபார ஆதிக்கத்தைச் செலுத்த ஆரம்பித்தது. சீனாவில் கட்டுமானம் மற்றும் உட்கட்டமைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்த காலகட்டத்தில் அதிக அளவிலான கடன்களை வங்கியிலிருந்து பெற்று, பல புதிய கட்டுமானங்களை மேற்கொண்டது.

இதனால் அந்த நிறுவனத்தின் வளர்ச்சி என்பது அசுரத்தனமாக இருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது. அளவுக்கு மீறிய கடன், மோசமான நிர்வாக மேலாண்மை போன்ற காரணங்களால், எவர்கிராண்டே நிறுவனத்தின் கடன் அளவு சுமார் 2 டிரில்லியன் யுவான் அதாவது 305 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்தது.

தற்போது எவர்கிராண்டே நிறுவனம் திவால் ஆனால் சீன ரியல் எஸ்டேட் துறை பெரும் மரண அடியைச் சந்திக்கும். அதோடு சீனா, ஹாங்காங் பங்குச்சந்தையிலும் இதன் தாக்கம் என்பது அதிகரித்து, பெரும் வீழ்ச்சியைச் சந்திக்கும். முன்னதாக எவர்கிராண்டே நிறுவனத்தின் வீழ்ச்சிக்குச் சீன அரசு கொண்டு வந்த புதிய சட்டங்களும் காரணம் என்று, பொருளாதார அறிஞர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

சீன அரசு கடன் சுமையைக் குறைக்கவும், மக்களுக்கு மலிவான விலையில் வீடுகளை அளிக்க வேண்டும் என்பதற்காகக் கடந்த சில வருடத்தில் ரியல் எஸ்டேட் துறை சார்ந்த கடன் மற்றும் நிலம் வாங்குவதில் 100க்கும் அதிகமான கடுமையான விதிமுறைகளை விதித்தது. இக்காரணத்தால் எவர்கிராண்டே-வின் வர்த்தகம் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு தற்போது கடனில் மிதக்கிறது.

எவர்கிராண்டே நிறுவனத்தைச் சீனா அரசு காப்பாற்றாமல் கைவிட்டால், கடந்த 2008ம் ஆண்டு அமெரிக்காவின் லேமன் பிரதர்ஸ் திவால் ஆனபோது சர்வதேச பொருளாதாரம் எந்த அளவிற்குப் பாதித்ததோ அதைவிடப் பெரிய பாதிப்பை தற்போது எதிர்கொள்ள நேரிடும் எனச் சர்வதேசச் சந்தை வல்லுநர்கள் எச்சரித்துள்ளார்கள்.

ஒருவேளை எவர்கிராண்டே 305 பில்லியன் டாலர் கடனுடன் திவாலானால் இந்த நிறுவனத்திற்குக் கடன் கொடுத்த வங்கிகள், இந்நிறுவனத்தில் முதலீடு செய்த தனியார் முதலீட்டாளர்கள், சில்லறை முதலீட்டாளர்கள், முதலீட்டு நிறுவனத்தில் இருக்கும் முதலீட்டாளர்கள், சீனாவில் முதலீடு மற்றும் வர்த்தகம் செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள் என இதன் பாதிப்பு என்பது உலகின் பல நாடுகள் வரை நீளும்.

ஒரு பேச்சுக்கு இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக இருக்கும் ரிலையன்ஸ் மற்றும் ஹெச்டிஎப்சி குழுமம் ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் திவால் ஆனால், என்ன நடக்கும். நம்மால் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியவில்லை அல்லவா. அதுபோன்ற ஒரு சூழ்நிலையில் தான் தற்போது சீனா எதிர்கொண்டு வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்