'வீடு வாங்க இருப்பவர்களுக்கு நல்ல செய்தி'... 'வீட்டுக்கடன் வட்டியை குறைந்த பிரபல வங்கி'... 10 வருடங்களில் இல்லாத குறைந்த வட்டி!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது பலரின் கனவாகும். அதற்காகவே தங்களின் வருமானத்தில் ஒரு பகுதியை வீடு வாங்க பலரும் சேமித்து வைப்பது வழக்கம். இந்த சூழ்நிலையில் கொரோனா காரணமாகப் பொருளாதாரம் கடுமையாக முடங்கிய நிலையில், பலருக்கும் சம்பள குறைப்பு, வேலையின்மை போன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டார்கள். தற்போது நிலைமை நல்ல நிலைக்குத் திரும்பி வரும் நிலையில், பலருக்கு மீண்டும் வீடு வாங்க வேண்டும் என்ற கனவு துளிர்விட்டுள்ளது.

இந்நிலையில் ஐசிஐசிஐ வங்கி வீட்டுக் கடனுக்கான வட்டியை 6.7 சதவீதமாகக் குறைத்துள்ளது. டந்த 10 வருடங்களில் இல்லாத மிகக் குறைந்த வட்டிவிகிதத்தை அந்த வங்கி அமல்படுத்தியுள்ளது. இன்று முதல் அமலுக்கு வந்திருக்கும் இந்தப் புதிய வட்டி விகிதம், வங்கியில் ரூ.75 லட்சம் வரை வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்குப் பொருந்தும் எனவும், ரூ.75 லட்சத்திற்கு மேலாகக் கடன் வாங்கியவர்களுக்கு வட்டிவிகிதமானது 6.7 சதவீதத்திலிருந்து தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வீட்டுக்கடனுக்கான இந்த வட்டி விகிதமானது இன்றிலிருந்து வருகிற மார்ச் 31 வரை அமலில் இருக்கும். முன்னதாக, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, கோடக் மஹிந்திரா உள்ளிட்ட வங்கிகள் தங்களது வட்டி விகிதத்தைக் குறைத்த நிலையில், அந்த வரிசையில் தற்போது ஐசிஐசிஐ வங்கியும் இந்த வட்டி விகித குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசிய ஐசிஐசிஐ வங்கியின் தலைமை சொத்துப் பிரிவு அதிகாரி ரவி நாராயணன், ''கடந்த சில மாதங்களாக நுகர்வோர்களின் வீடு வாங்க வேண்டும் என்ற தேவை அதிகரித்து வருகிறது. இதனை நாங்கள் நுட்பமாகக் கவனித்து வருகிறோம். அதனடிப்படையில் இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளது'', எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த நவம்பர் மாதத்தில் இந்தியாவிலேயே அதிகபட்சமாக ரூ.2 லட்சம் கோடி வரை வங்கிக்கடன் வழங்கிய தனியார் வங்கி என்ற பெருமையை ஐசிஐசிஐ வங்கி பெற்றது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்