'ஸ்கைப் கால்,ஜமால் உடை-ஒட்டுத்தாடி'.. சவுதியின் சதிகளை அடுத்தடுத்து அம்பலப்படுத்தும் துருக்கி!

Home > தமிழ் news
By |
'ஸ்கைப் கால்,ஜமால் உடை-ஒட்டுத்தாடி'.. சவுதியின் சதிகளை அடுத்தடுத்து அம்பலப்படுத்தும் துருக்கி!

பத்திரிக்கையாளர் ஜமால் கொல்லப்பட்ட விவகாரத்தில் அடுத்தடுத்து பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

சவுதி அரசரையும், இளவரசர் முகமது பின் சுல்தானையும் தொடர்ந்து விமர்சனம் செய்து எழுதிவந்த பத்திரிகையாளர் ஜமால் கடந்த செப்டம்பர் 28-ம் தேதி விவாகரத்து தொடர்பான ஆவணங்களைப் பெற, சவுதி தூதரகத்துக்குள் சென்றார். துருக்கியில் உள்ள தனது காதலியை திருமணம் செய்யும் பொருட்டு அவர் துருக்கி நாட்டில் உள்ள சவுதி தூதரகத்துக்கு சென்றார்.மீண்டும் அக்டோபர் 2-ம் தேதி வருமாறு அவரிடம் அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

தொடர்ந்து அக்டோபர் 2-ம் தேதி சவுதி தூதரகத்துக்குள் சென்ற ஜமால் அதற்குப்பின் மீண்டும் வெளியில் வரவில்லை. இது உலக அரங்கில் பல அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக சவுதிக்கு, அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தும் பயனில்லை. இதைத்தொடர்ந்து ஜமால் கொலை செய்யப்பட்டதாக துருக்கி அரசு செய்தி வெளியிட, சவுதி அரசு அதனை ஒப்புக்கொண்டது. ரியாத்தில் இருந்து 15 பேர் கொண்ட ஸ்பெஷல் டீம் ஒன்று இஸ்தான்புல்லுக்கு சென்று அவரைத் துண்டு,துண்டாக வெட்டிக் கொலை செய்துள்ளது.

 

இந்த 15 பேரும் சவுதி இளவரசரின் பாதுகாப்பு பணியில் உடன் செல்பவர்களாம். இவர்கள் அனைவரும் வந்திறங்கியது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் ஹோட்டல் அறையில் தங்கி இருந்தது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி மிகப்பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த டீம் ஜமாலைக் கொன்று உடலை சூட்கேஸில் அடைத்து காட்டுப்பகுதியில் வீசியதாக கூறப்படுகிறது.

 

இந்த கொலையை சவுதி இளவரசரின் வலது கையாக இருந்து செயல்படும் சாத் அல் கவ்தானி என்பவர் ஸ்கைப் கால் வழியாக முன்னின்று நடத்தியுள்ளார். மேலும் ஜமால் தூதரகத்துக்கு சென்ற அன்று, அவரது உடையை அணிந்து ஒட்டுத்தாடி வைத்துக்கொண்டு தூதரகத்தில் இருந்து அந்த 15 பேர் கொண்ட பாதுகாப்பு குழுவில் இருந்து ஒருவர் வெளியேறும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஜமால் தொடர்பான ஆதாரங்களை ஒன்றன்பின் ஒன்றாக வெளியிட்டு வரும் துருக்கி அரசு தற்போது இந்த ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளது.

 

ஜமாலின் ஆடையை அணிந்திருந்தவர் பெயர் முஸ்தஃபா அல் மதானி (Mustafa al-Madani) என்றும், அவர் சவுதி அரசால் அனுப்பப்பட்ட 15 பேரில் ஒருவர் எனவும்  துருக்கி அதிகாரி ஒருவர் சி.என்.என் ஊடகத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளார். ஜமால் கொலை விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்த வேண்டும் என துருக்கி அதிபர் ரிசப் யிப் எர்டோகன் (Recep Tayyip Erdogan) அந்நாட்டு உளவுத்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் இந்த கொலை விவகாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

AMERICA, SAUDIARABIA, TURKEY, JAMALKHASHOGGI, JOURNALIST