டெல்லியில் நேற்று முன்தினம் ஒரு வீட்டிலிருந்து கைகள், கால்கள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாகத் தொங்கிய 11 பேர் கண்டெடுக்கப்பட்டனர். அவர்கள் வீட்டிலிருந்து போலீசார் கைப்பற்றிய டைரியில் எப்படி தற்கொலை செய்து கொள்வது? எந்த நாளில் செய்யலாம்?உள்ளிட்ட பல்வேறு குறிப்புகளை இறப்பதற்கு முன் அவர்கள் எழுதி வைத்திருந்தனர்.

 

மேலும் வீட்டின் சுவர்களில் சில விசித்திரமான தடயங்களும் போலீசாருக்குக் கிடைத்துள்ளன. வீட்டின் சுவரில் மொத்தம் 11 குழாய்கள் வெளியே வந்து இணைப்பு இல்லாமல் நீட்டிக்கொண்டிருந்துள்ளன. ஆனால் அந்த குழாய்கள் உள்ளே எதனுடனும் இணைக்கப்படவில்லை. இதனால் போலீசார் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

 

இந்த நிலையில் இவர்களின் இறப்புக்கு மந்திரவாதி ஒருவர் காரணமாக இருக்கலாம் என்று போலீசார் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது. இறந்த குடும்பத்தினர் மந்திரவாதி ஒருவருடன் தொடர்பு வைத்திருந்தாகவும், அந்த மந்திரவாதி இவர்களை அழைத்துச்சென்று ஆலமரத்தில் பூஜை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

 

இதனை வைத்துப்பார்க்கும்போது குறிப்பிட்ட அந்த மந்திரவாதி, குடும்ப உறுப்பினர்கள் 11 பேரையும் மூளைச்சலவை செய்து, தற்கொலைக்குத் தூண்டியிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதனை உறுதிப்படுத்துவது போல, வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியிலும் ஆலமரத்தை வழிபடுவது குறித்து குறிப்புகள் எழுதப்பட்டுள்ளன.

 

ஆலமரத்தில் விழுதுகள் தொங்குவதுபோல், வீட்டில் அனைவரின் உடல்களும் தொங்கின. மேலும், அந்த டைரிக் குறிப்பில் கடவுள் ஆலமரம் போன்றவர் நாம் விழுதுகள் போல் இருக்க வேண்டும் என்ற குறிப்புகளையும், இவர்கள் விழுதுகள் போல் தூக்குப்போட்டுத் தொங்கியதையும் போலீசார் ஒப்பிட்டுப் பார்த்து தங்களது விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS