மணப்பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்!

Home > தமிழ் news
By |
மணப்பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்!

புதுச்சேரியில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கழுத்தறுக்கப்பட்டு இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அந்த பெண்ணின் பக்கத்து வீட்டு இளைஞர் கைது செய்யப்பட்ட வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியின் குயவர்பாளையத்தைச் சேர்ந்த நல்லதண்ணீர் எனும் இடத்தில் வசித்து வந்த அகிலாண்டேஷ்வரியின் இரண்டாவது மகள் அம்சபிரபா(25). வரும் ஜனவரி மூன்றாம் வாரம் அம்சபிரபாவுக்கும், அவரது காதலர் விஜயகுமாருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் அம்சபிரபா கடந்த வாரம், பூட்டிய வீட்டில் கழுத்தறுக்கப்பட்டு நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.


முன்னதாக முதற்கட்ட விசாரணையில் ஈடுபட்ட புதுவை போலீசார் அம்சபிரபாவின் பக்கத்து வீட்டு இளைஞரான தீபக்ராஜையும், அவரது நண்பர்களையும் கைது செய்தனர். தொடர்ந்து புலன் விசாரணையில் திடீர் திருப்பமாக இந்த கொலையில் பக்கத்து வீட்டு17  வயது விடலை பையன்தான் குற்றவாளி என்று புதுவை போலீசார் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.  இறந்துபோன அம்சபிரபாவின் வீட்டுச்சாவியும், அவரது செல்போனும் அவரது தெருவுக்கு அருகில் இருக்கும் சாக்கடையில் கிடைத்துள்ளதை அடுத்து, அந்த தெருவின் சிசிடிவி வீடியோ ஆதாரத்தை போலீஸார் பரிசோதித்துள்ளனர். பின்னர் பக்கத்து வீட்டைச் சேர்ந்த 17 வயது விடலை பையன் ஒருவன் அம்சபிரபா வீட்டின் மொட்டை மாடியில் இருந்தது தெரியவந்துள்ளது.


இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் நடத்திய விசாரணையில் அந்த 17 வயது இளைஞன் புறாக்கள் வளர்ப்பதாகவும், அப்புறாக்கள் அடிக்கடி அம்சபிரபாவின் வீட்டு மொட்டை மாடிக்கு சென்றதால் அதனைப் பிடிக்க அடிக்கடி சென்றுள்ளான்.  சந்தேகமடைந்த அகிலாண்டேஸ்வரியும் அவரது மகள் அம்சபிரபாவும் அவனிடம் சண்டையிட்டுள்ளனர். அப்படி ஒரு நாள் அகிலாண்டேஸ்வரி வெளியே சென்றபோது, அந்த பையன் புறாவை பிடிக்க மொட்டை மாடி வந்துள்ளான். அப்போது அம்சபிரபா அவனை கண்டித்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞன் ஒரு செங்கல்லை எடுத்து எறிந்ததும் முகத்தில் பட்டு படுகாயம் அடைந்திருக்கிறார் அம்சபிரபா.


எதேச்சையாக நடந்த இந்த நிகழ்வை யாரும்  பார்க்காததால், அந்த பையன் உடனே தூக்கிச் சென்று அம்சபிரபாவினை அவளது வீட்டறையில் படுக்க வைத்துள்ளான். பிறகு அந்த பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி அப்பெண்ணின் கழுத்தை அறுத்து கொலையும் செய்துள்ளான். பின் அங்கே இருந்த அம்சபிரபாவின் செல்போனை எடுத்துக்கொண்டு வீட்டை பூட்டி, சாவியையும் எடுத்துக்கொண்டு வெளியேறியவன் அவற்றை சாக்கடையில் வீசியுள்ளான் என்றும் போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

CRIME, MURDER, TAMILNADU, BRIDE, YOUNGSTER