'மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது மாணவிக்கு நிகழ்ந்த சோகம்'...கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

Home > தமிழ் news
By |
'மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது மாணவிக்கு நிகழ்ந்த சோகம்'...கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

சென்னை தாம்பரத்தில் உள்ள கல்லூரி மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது மாணவி,மரணமடைந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னை தாம்பரத்தில் உள்ள பிரபலமான மற்றும் பழமையான சென்னை கிறித்துவக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருபவர் மகிமா.இவர் கல்லூரி வளாகத்தில் `ஸ்போர்ட்ஸ் பார் ஆல்' என்ற திட்டத்தில் அளிக்கப்படும்  விளையாட்டுப் பயிற்சியில் பங்கேற்று கூடைப்பந்து விளையாடிக்கொண்டிருந்தார்.அப்போது திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார்.உடனே அருகிலிருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மாணவி மகிமாவை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.அங்கு அவரை பரிசோதித்த மாணவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்கள்.

 

இதனால் ஆத்திரமுற்ற மாணவர்கள் மாணவி மகிமா மரணத்துக்குச் சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகமே காரணம் என்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த சேலையூர் காவல்துறையினர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.ஆனால் கல்லூரி முதல்வர் எங்களிடம் பேச வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்கள்.

 

இதற்கிடையில் பிரேத பரிசோதனைக்குப் பிறகு மாணவி மகிமாவின் உடல் அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் மாணவி எப்படி இறந்தார் என்று மாணவர்கள் கூறுகையில், சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் அனைவரையும் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபடக் கட்டாயப்படுத்தியுள்ளது. அப்போது, மகிமா, விளையாட விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார்.

 

ஆனால், அவரை உடற்கல்லூரி இயக்குநர் ஒருவர் கட்டாயப்படுத்தியதால் வேறுவழியின்றி பயிற்சியில் ஈடுபட்டார். அப்போதுதான் அவர் மயக்கமடைந்தார். ஆம்புலன்ஸ் வரத் தாமதமும் மாணவி இறப்புக்கு ஒரு காரணம். எனவே, விருப்பம் இல்லாத மாணவ, மாணவிகளை விளையாட்டுப் பயிற்சியில் கட்டாயப்படுத்தக் கூடாது. மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.

 

இந்நிலையில் மாணவர்கள் மத்தியில் பேசிய கல்லூரி முதல்வர் மாணவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என உறுதியளித்தார்.இதனை தொடர்ந்து மாணவர்கள் கலைந்து சென்றார்கள்.இந்நிலையில் மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகே,மாணவி மகிமாவின் இறப்பிற்கான முழு காரணமும் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மாணவி மகிமாவின் திடீர் மரணம் கல்லூரி மாணவர்களிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

COLLEGESTUDENT, MADRAS CHRISTIAN COLLEGE, MCC