'தனது அடையாளத்தை மறைத்து'...கூலியாக வேலைசெய்த கலெக்டர்!

Home > தமிழ் news
By |
'தனது அடையாளத்தை மறைத்து'...கூலியாக வேலைசெய்த கலெக்டர்!

கேரள வெள்ளம் வரலாற்றில் இல்லாத அளவிற்கு சோகத்தை ஏற்படுத்தி விட்டு சென்றுவிட்டது.அதன் பாதிப்பிலிருந்து கேரள மக்கள் இன்னும் முழுமையாக  மீளமில்லை.வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 488 பேர் மரணமடைந்துள்ளனர். பல்லாயிரம் கோடி அளவிற்கு கடுமையான பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது.பல மாநில அரசுகள்,வெளிநாடுவாழ் இந்தியர்கள்,பல அமைப்புகள் என பல்வேறு அமைப்பிலிருந்தும் பல கோடி ரூபாய் அளவிற்கு நிதிகள் வந்த வண்ணம் உள்ளது.

 

மீட்பு பணிகளில் பலரும் களத்தில் இறங்கி மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். ராணுவப்படையினரும், கேரள மீனவர்களும்  வெள்ளத்தில் தத்தளித்த மக்களை மீட்டனர்.இந்நிலையில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் 8 நாட்களாக நிவாரண முகாம்களில் தான் யார் என்பதை மறைத்து மீட்புப் பணிகளில்ஈடுபட்டுள்ளார்.

 

இந்தியாவின் யூனியன் பிரதேசங்களுள் ஒன்றான தத்ரா மற்றும் நாகர் ஹாவேலியில் ஐஏஎஸ் அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் கண்ணன் கோபிநாத். இவர் தங்கள் பிரதேசத்தின் சார்பில் கேரளாவிற்கு வழங்கப்பட்ட ரூ.1 கோடியை கேரள முதலமைச்சரிடம் ஒப்படைப்பதற்காக கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி கேரளா வந்துள்ளார்.

 

இவர் கேரளாவை பூர்விகமாக கொண்டவர்.பணத்தை ஒப்படைத்த பின்னர் தனது பணிக்கு செல்லலாம் என நினைத்த அவர்,கேரளாவின் நிலையை பார்த்துவிட்டு நேராக திருவனந்தபுரம் சென்றுள்ளார். அங்கிருந்து பல முகாம்களுக்கு சென்ற அவர் தொடர்ந்து 8 நாட்களாக தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்பதையே மறைத்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். பின்னர் 9ஆம் நாள் தனது ஐஏஎஸ் பணிகளை தொடர அங்கிருந்து யாருக்கும் தெரியாமல்  புறப்பட்டுச் சென்றுள்ளார்.

 

மீட்புப்பணிகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ நான் பெரிதாக எதுவும் செய்துவிடவில்லை. நான் சாதரணமாக சில பணிகளை செய்துள்ளேன். உண்மையில் வெள்ளத்தின்போது இங்கு பொறுப்பிலிருந்த அதிகாரிகளே பாராட்டப்பட வேண்டியவர்கள். அவர்களே உண்மையான ஹீரோக்கள். நான் இதை ஒரு செய்தியாக்க விரும்பவில்லை. என்னை பாராட்டுவது நியாயமும் இல்லை. களத்தில் இறங்கியவர்கள் தான் உண்மையான நாயகர்கள் என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

.

KERALAFLOOD, IAS OFFICER