பிஹைண்ட்வுட்ஸ், சரவணா செல்வரத்னம், லாரன்ஸூடன் இணைந்து டெல்டாவுக்கு உதவுங்கள்!

Home > தமிழ் news
By |
பிஹைண்ட்வுட்ஸ், சரவணா செல்வரத்னம், லாரன்ஸூடன் இணைந்து டெல்டாவுக்கு உதவுங்கள்!

15 வருடங்களாக இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் மீடியாவாக திகழும் பிஹைண்ட்வுட்ஸின் 6-வது கோல்டு மெடல்ஸ் விருதுகள் வழங்கும் விழா அண்மையில் சென்னை டிரேடு செண்டரில் கோலாகலமாக நடந்தது. ‘ஹானரிங் தி இன்ஸ்பிரேஷன்’ என்கிற நோக்கில், சமூகத்தில் முன்னுதாரணமாகவும், வழிகாட்டிகளாகவும் வாழும், அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் திரு.ஆர்.நல்லக்கண்ணு அய்யா, திரு. உ. சகாயம் ஐஏஎஸ், திரு நக்கீரன் கோபால், ஆசிரியர் திரு. பகவான் மற்றும் கால்பந்தாட்ட நடுவரும் வீராங்கணையுமான ரூபா தேவி உள்ளிட்ட 5 பேருக்கு இந்த ICON OF INSPIRATION என்கிற விருதினை வழங்கி கவுரவப்படுத்தியதில் பிஹைண்ட்வுட்ஸ் பெருமை கொள்கிறது.

 

பிஹைண்ட்வுட்ஸ் அளித்த விதைத்தொகை:

 

எப்போதுமே எண்ணம்தான் செயலுக்கு வடிவம் கொடுக்கும். அவ்வகையில், ஆக்கப்பூர்வமாக ஒன்றைச் செய்யவேண்டும் என்று எண்ணியது பிஹைண்ட்வுட்ஸ். தமிழகத்தை சூறையாடிய கஜா புயலால் பாதிக்கப்பட்ட பலரின் நிற்கதியான நிலைக்கு மருந்தாக இருக்கவும், அவர்களின் வாழ்விடத்தை மறுசீரமைக்கவும் மக்களோடு சேர்ந்து நிதிதிரட்ட எண்ணியது. அதற்கு முதலில் தானே உதவிக்கரம் நீட்டவும் முன்வந்தது. அதற்கான விதைத் தொகையாக பிஹைண்ட்வுட்ஸ், தன் சார்பில் ரூ.2.5 லட்சத்தை விழா மேடையிலேயே வழங்கியது.

 

பிஹைண்ட்வுட்ஸ் கோல்ட மெடல்ஸ் விருதுகள்:

 

பிஹைண்ட்வுட்ஸ் கோல்டு மெடல்ஸ் விருது வழங்கப்பட்ட இவ்விழாவின் டைட்டில் ஸ்பான்ஸரான சரவணா செல்வரத்தினம் சார்பில் ரூ.2.5 லட்சமும், முன்னதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தன் சார்பில் ரூ 2.5 லட்சமும் வழங்கி தங்கள் பங்களிப்பினை செலுத்தினர். மேலும் விழா மேடையிலேயே திரண்ட இந்த மொத்த தொகை ரூ.7.5 லட்சம் ரூபாயும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட கூடகுடி, செரநல்லூர் பகுதிகளில் இருந்து வந்த பரமசிவன் மற்றும் பிரதாப் ஆகியோரின் கைகளில் வழங்கப்பட்டது. 

 

இதனை அடுத்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஊர்களின் பிரதிநிதியாக பேசிய பரமசிவன், கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டம் திருக்குவளை தாலுகா, தலைஞாயிறு ஒன்றியத்தைச் சேர்ந்த கச்சிநகரத்துக்கு உட்பட்ட தங்களது செரநல்லூர் மற்றும் கூடகுடி கிராமங்களுக்கு இந்த நிதி உதவிகள் கிடைத்தமைக்கு தங்கள் ஊர் சார்பாக நன்றி கடந்த வணக்கத்தைத் தெரிவித்தார். மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் பல கிராம மக்களுக்கு உதவி செய்யுமாறு கோரியிருந்தார்.  இதனைத் தொடர்ந்து புயலால் பாதிக்கப்பட்டு வீடு -வாசல் எல்லாவற்றையும் இழந்து நிற்கும் அந்த மக்களுக்கு சக மக்களாகிய நீங்களும் இயன்றதைக் கொடுத்து உதவ முன்வரவேண்டும் என்கிற கோரிக்கையை பிஹைண்ட்வுட்ஸ் முன்வைத்துள்ளது.

 

திரு. உ. சகாயம் ஐஏஎஸ் உரை:

 

இவ்விழாவில் நேர்மையான இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாக மக்களின் பேராதரவைப் பெற்றுள்ள சகாயம் ஐஏஎஸ்,  கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் கண்ட, தன் துயரமான அனுபவத்தை பகிர்ந்தார். இதுகுறித்து அவர் பேசும்போது, ‘சோநாடு சோறுடைத்த என்று சொல்வார்கள். தமிழகத்துக்கே சோறுபோட்ட மண்தான் அந்த சோழநாடு. தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் கஜா புயலின் கோர தாண்டவத்தை பார்த்தோம். அதை கேள்விப்பட்ட உடனயே நூற்றுக்கணக்கான எம்முடைய மக்கள் பாதை இளைஞர்களை களத்திற்கு அனுப்பிவைத்தோம். அங்கு சென்று மனிதாபிமான அடிப்படையிலான பணிகளை அவர்கள் ஆற்றினர். ஊருக்கே சோறுபோட்ட எம்முடைய மக்கள் பட்டினியாக வாடும் செய்தி எங்கள் நெஞ்சில் வலியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து நாங்கள் மறுவாழ்வு பணிகளை மேற்கொண்டோம். அதன் ஒரு பகுதியாக, இந்த சமூகத்தை உளமாற நேசிக்கக் கூடிய ஒப்பற்ற கலைஞர் ராகவா லாரன்ஸ் கொடுத்த இந்த பெரும் தொகை நிச்சயம் எளிய மக்களுக்கு உதவும் என கருதுவதாகக் கூறி, தன் நன்றியையும் தெரிவித்தார்.

 

திரு. ராகவா லாரன்ஸின் வேண்டுகோள்: 

 

விழாவில் நடிகரும், சமூக ஆர்வலருமான ராகவா லாரன்ஸ்க்கு ‘ICON OF SOCIAL RESPONSIBILITY IN CINEMA’ என்கிற விருது  வழங்கப்பட்டது.  இந்த விருது,  திரு.உ. சகாயம் ஐஏஎஸ் அவர்களின் கைகளால் திரு. ராகவா லாரன்ஸ்க்கு வழங்கப்பட்டது. இந்த விருது பற்றி பேசிய ராகவா லாரன்ஸ், ‘சினிமாவில் நடன இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் இருந்திருக்கிறேன். ஆனால் நிஜ வாழ்க்கையில் ஒரு ஹீரோவுக்கு கிடைத்த இந்த விருதினால் நான் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் பல நல்ல காரியங்களை செய்யத் தோன்றுகிறது’ என்று கூறியவர், இந்த விருதுக்காக பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனத்துக்கு தன் நன்றியையும் தெரிவித்தார்.

 

அதுமட்டுமல்லாமல், ‘சகாயம் அவர்களின் கைகளால் இவ்விருதினை பெற்ற தன் மகிழ்ச்சியையும் பெருமையையும் பகிர்ந்தார். மேலும் ஒரு வேண்டுகோளையும் ராகவா லாரன்ஸ் விடுத்தார். ‘சென்னை வெள்ளம் வந்தபோது அதன் பாதிப்பை பார்த்திருப்போம். அவற்றை மீடியாக்கள் கவர்ந்தன. ஆனால் இங்கு நிகழ்ந்தவற்றை விட 100 மடங்கு டெல்டா மாவட்டங்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ளன. எனினும் 50 வீடுகள் கட்டுவதற்கான முயற்சியில் நான் இறங்கினேன்.

 

இது தொடர்பாக பிஹைண்ட்ஸ்வுட்ஸிடம், கஜா புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து மோசமான சுழலில் குழந்தைகளுடன் வசிக்கும் பல குடும்பங்களுக்கு உதவ வேண்டி ஒரு கோரிக்கையை வைத்தேன்.  ஒரு 25 ஆயிரம் ரூபாய் இருந்தால் கூட, இந்த மக்களுக்கான ஒரு வீட்டை அமைத்துக் கொடுக்க இயலும். வீடுகளை இழந்து முகாம்களில் தங்கி இருக்கும் அவர்களின் வாழ்வாதாரத்துக்கு நீங்கள் அளிக்கும் 100 ரூபாய் கூட உதவும்.  இதற்காக என்னுடைய பங்களிப்பை நான் அளித்தேன். இதே போல்  பிஹைண்ட்வுட்ஸூம் தன் பங்களிப்பை தாமதிக்காமல் உடனடியாக வழங்கியது’ என்று பேசினார்.

GAJACYCLONE, BEHINDWOODS, GAJACYCLONERELIEF, BEHINDWOODSGOLDMEDAL, ICONICEDITION, 15YEARSOFBEHINDWOODS, BEHINDWOODSGOLDMEDALS2018, NALLAKANNU, SAGAYAM IAS, NAKKHEERAN GOPAL, TEACHERBHAGAVAN, RUBA DEVI