கஜா புயலில் தமிழக அரசின் நடவடிக்கை: வாழ்த்திய ஸ்டாலின்; தூற்றிய கனிமொழி!

Home > தமிழ் news
By |
கஜா புயலில் தமிழக அரசின் நடவடிக்கை: வாழ்த்திய ஸ்டாலின்; தூற்றிய கனிமொழி!

தமிழகத்தை கஜா புயல் புரட்டி போட்டதை அடுத்து மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதோடு, பல சேதங்களும் அடைந்தன. எனினும் தமிழக அரசு முழுவீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் செயல்பட்டு வருவதால் பெரும்பாலான சேதங்கள் தவிர்க்கப்பட்டு வருகின்றன. 

 

காவல்துறையினரும், பேரிடர் மேலாண்மை மீட்புப் படையினரும் தங்கள் பணிகளை திறம்பட செய்துவருவதாலும் இந்த பேரிடரை இலகுவாகக் கடக்க முடிகிறது.  இந்நிலையில் புயல் தொடர்பாக தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

 

முன்னேற்பாடுகள் மேற்கொண்ட விதம் பாராட்டிற்குரியது என்று கூறியவர், அதன் தொடர் நடவடிக்கைகளுக்கு ஆட்சியாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும், புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்வதில் புயல் வேகத்துடன் அரசு இயந்திரம் இயங்கிட வேண்டியது அவசியம் என்றும் கேட்டுக்கொண்டார். 

 

மேலும் கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான உணவு,குடிநீர்,மருத்துவ வசதி,போக்குவரத்து சீர்படுத்துதல் போன்ற நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசுதரப்பில் மேற்கொள்ளும் மீட்புப் பணிகளுடன் இணைந்து செயலாற்ற வேண்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

 

இதே நேரம்  கஜா புயலை எதிர்கொள்ளும் விதமாக தமிழக அரசு எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை என தீமுக எம்.பி’யும் மு.க.ஸ்டாலினின் சகோதரியுமான கனிமொழி, தூத்துக்குடியில் பேட்டி அளித்துள்ளது முற்றிலும் முரண்பாடாக உள்ளதாக சமூக வலைதளங்களில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.