தன் இறுதிச்சடங்குக்கு தேவையானதை தானே வாங்கிவைத்துவிட்டு விவசாயி தற்கொலை!

Home > தமிழ் news
By |

விவசாயக் கடனை திருப்பி செலுத்த முடியாமல், தன்னுடைய இறுதி சடங்கிற்கு தேவையான பொருள்களை தானே வாங்கிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட விவசாயி ஒருவரின் செயல் இந்தியாவையே உலுக்கியுள்ளது.

தன் இறுதிச்சடங்குக்கு தேவையானதை தானே வாங்கிவைத்துவிட்டு விவசாயி தற்கொலை!

ஆந்திர பிரதேசத்தில் மல்லப்பா என்கிற விவசாயி தன் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 பெண் பிள்ளைகளும் 1 ஆண் பிள்ளையும் உள்ளனர். 3 பெண்களையும் திருமணம் செய்துகொடுத்து அருகிலுள்ள ஊர்களில் வசித்து வருகின்றனர். இளைய மகன் வேலை தேடிக்கொண்டு பெங்களூர் வசித்துவருகிறார்.

மல்லப்பா தன் மனைவியுடன் ஊரில் தனக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தில் தக்காளியும் வேர்க்கடலையும் பயிரிட்டு விவசாயம் செய்துவந்துள்ளார். இந்நிலையில் விவசாயத்திற்காக வங்கியில் ரூ.2,85,000 கடன் பெற்று தன்னுடைய நிலத்தில் 4 இடங்களில் போர்வெல் போட்டுள்ளார். ஆனால் அவற்றுள் 3 போர்வெல்களில் தண்ணீர் வராததால் மீதமிருந்த ஒரு போர்வெல்லில் இருந்து வரும் நீர் தக்காளிக்கும் வேர்கடலைக்கும் போதுமானதாக இருக்காது என கருதி தக்காளிக்கு மட்டும் நீர் பாசனம் செய்து வந்துள்ளார்.

ஆனால் தக்காளி போதுமான விலைக்கு விற்கப்படாததால் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. பிறகு கடந்த 2018 -ஆம் ஆண்டு, தக்காளி விளையும் நிலத்தில் ஒரு ஏக்கருக்கு 1000 ரூபாய் வீதம் நஷ்டம் ஏற்பட்டதாக குறிப்பிடுகின்றனர்.

இதனால் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்த மல்லப்பா, இறுதி சடங்கிற்கு தேவையான மாலை, ஊதுபத்தி,வெள்ளைத் துணி, தன்னுடைய போட்டோ, தன் மனைவிக்கு வளையல் போன்றவற்றை முன்னரே வாங்கி தன் தந்தையின் சமாதியில் வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த உருக்கமான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அக்குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் அளிப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

ANDHRA PRADESH, FARMER, SUICIDE, LOAN