BGM Biggest icon tamil cinema BNS Banner

'பிக்பாஸின் சர்வாதிகாரி டாஸ்க்'.. நடிகர் கமல்ஹாசன் மீது போலீசில் புகார்!

Home > தமிழ் news
By |
'பிக்பாஸின் சர்வாதிகாரி டாஸ்க்'.. நடிகர் கமல்ஹாசன் மீது போலீசில் புகார்!

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நடிகர் கமல்ஹாசன் மற்றும் பிக்பாஸ் நிறுவனம் மீது  நடவடிக்கை எடுக்குமாறு, வழக்கறிஞர் லூசியா என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

 

அவர் அளித்துள்ள புகார் கடிதத்தில், ''நான் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 27 ஆண்டுகளாக வழக்கறிஞராகப் பணிபுரிந்துவருகிறேன். நான் பல்வேறு சமூக, சமுதாயப் பணிகளையும் செய்துவருகிறேன். தமிழகத்தில் சமீப காலமாக புதுப்புது அரசியல் கட்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. அப்படி கட்சி ஆரம்பிப்பவர்கள், தாங்கள் மக்களுக்கு என்ன செய்யப்போகிறோம் எனக் கூறி ஆட்சிக்கு வர முயற்சி செய்யலாம். ஆனால், அதைவிட்டு முந்தைய ஆட்சியாளர்களை கேவலமாகவும் அவதூறாகவும் பேசி வருகின்றனர். அதை தடுக்க வேண்டும். விஜய் டிவியில் பிக்பாஸ் 2 என்ற நிகழ்ச்சி கடந்த 40 நாள்களாக ஒளிபரப்பு செய்யப்பட்டுவருகிறது.

 

ஒரு வாரம் நடந்த நிகழ்வை சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்குவார். அப்போது அவர், மக்கள் நீதி மய்யம் கட்சியை வளர்க்க கட்சி சம்பந்தமான பேச்சுக்களை பேசுகிறார். இது அவரது கட்சியை வளர்க்க அவர் எடுத்துள்ள யுக்தி, மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தும் விதமாக தொடர்ந்து பேசிவருகிறார். சர்வாதிகாரி என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஜஸ்வர்யா என்ற பெண் சர்வாதிகாரியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

 

இந்த டாஸ்க்கில் என்ன பேச வேண்டும் என்ன செய்ய வேண்டும் என முன்கூட்டியே இந்தத் தொடரை நடத்தும் Endemolshine India என்ற நிறுவனமும் நடிகர் கமல்ஹாசனும் கூறுகின்றனர். அதைத்தான் இவர்கள் நடித்துகாட்டுகின்றனர். அதன்படி 31-07-2018 ஒளிபரப்பிய நிகழ்ச்சியில் போட்டியாளரான ரித்விகா என்பவர், இந்த டாஸ்க் வடநாட்டிலிருந்து வந்த ஐஸ்வர்யாவுக்கு தெரியாது. தமிழ்நாட்டில் சர்வாதிகார ஆட்சி செய்தவர்களின் நிலைமை என்ன ஆச்சு என இவர்களுக்கு தெரியாது எனக் கூறுகிறார். இந்த டாஸ்க் முடிந்தவுடன் வரும் சனிக்கிழமை கமல் தொகுத்து வழங்கும்போது தமிழகத்தில் சர்வாதிகாரி போன்று ஆட்சி நடத்தியவர்கள் என்ன ஆனார்கள் என்பது போல பேசுவார்.

 

எனவே, தமிழகத்தை அமைதிப்பூங்காவாக ஆட்சி நடத்திய மறைந்த முன்னாள் முதல்வர் அம்மா அவர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறாக சர்வாதிகாரி போன்று சித்தரித்து நடத்தி வரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியைத் தடை செய்வதோடு, அம்மா அவர்களை சர்வாதிகாரி போல் சித்தரிக்கும் நடிகர் கமல்ஹாசன் மற்றும் இந்த நிகழ்ச்சியைத் தயாரிக்கும் Endemolshine India நிறுவனத்தின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்,'' இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.